நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.24,375 கோடி செலவில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எந்தந்த மாவட்டத்தில் தற்போது மருத்துவக் கல்லூரி இல்லையோ அங்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுக்குள் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்க்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 24,375 கோடி செலவில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், மேலும் 15,700 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவ துறையில் இதுவொரு மிகப்பெரிய விரிவாக்கம்" என்றார்.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். 2019-20 ஆம் ஆண்டிற்கான 6 மில்லியன் டன்களுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்க்கரை ஆலைகளுக்கு 2019-20 மார்க்கெட்டிங் ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) ஒரு டன்னுக்கு மொத்தம் 10,448 ரூபாய் ஏற்றுமதி மானியம் வழங்கப்படும், இதனால் அரசுக்கு கூடுதலாக, ரூ .6,268 கோடி செலவாகும். சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
அதேபோல், நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும், அரசின் அனுமதி இல்லாமல் ஒப்பந்த அடைப்பையில் உற்பத்தி செய்வதில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டு அனுமதியளித்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.