Sweety Kumari
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ஞாயிற்றுக்கிழமை நீதித்துறையில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Calcutta HC’s Justice Abhijit Gangopadhyay says quitting judiciary to join politics
வங்காள செய்தி சேனலான ஏ.பி.பி ஆனந்தாவுக்கு அளித்த பேட்டியின் போது நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், “ஆளும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) தலைவர்களால் பலமுறை (அரசியல்) களத்தில் வந்து போராடும்படி எனக்கு சவால் விடப்பட்டுள்ளது, அதனால் ஏன் முடியாது என்று நான் நினைத்தேன்” என்று கூறினார்.
சண்டைகள் முதல் புறக்கணிப்பு வரை, வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த நீதிபதிக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மன்னிப்பு என நீதிமன்ற அறையில் பல வியத்தகு தருணங்களைக் கண்ட நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், டிக்கெட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார், ஆனால் அவர் எந்தக் கட்சியில் சேரப் போகிறார் என்று சொல்லவில்லை. .
நேர்காணலில், நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தனது கடைசி நாள் திங்கள்கிழமை என்றும், தனது ராஜினாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்புவதாகவும் கூறினார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த அபிஜித் கங்கோபாத்யாய், மாநிலத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக கூறினார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து சாதாரண மக்களை அணுக முடியவில்லை என்றும் அபிஜித் கங்கோபாத்யாய் கூறினார்.
“ஒரு வங்காளியான என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சியாளர்களாக உருவானவர்களால் ராஜ்யத்திற்கு நன்மை செய்ய முடியவில்லை போலும். சவாலை ஏற்று செவ்வாய்க்கிழமை பதவி விலக முடிவு செய்துள்ளேன். திங்கட்கிழமை, என் கைவசம் நிறைய வழக்குகள் இருப்பதால் நான் நீதிமன்றத்திற்கு வருவேன்,” என்று அபிஜித் கங்கோபாத்யாய் கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் தேபாங்ஷு பட்டாச்சார்யா, “அவர் ஒரு அரசியல் கட்சியின் தொண்டர் என்று நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். நாங்கள் கூறி வந்தது சரி என்று நிரூபித்ததற்காக இன்று அவருக்கு நன்றி கூறுகிறோம்,” என்று கூறினார்.
அரசியலில் சேரும் அபிஜித் கங்கோபாத்யாயின் முடிவை மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார் வரவேற்றுள்ளார். “அபிஜித் கங்கோபாத்யாய் போன்றவர்கள் அரசியலில் சேருவது நாட்டுக்கு சாதகமான ஒன்று. பா.ஜ.க அவரது இயல்பான தேர்வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று சுகந்தா மஜும்தார் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அபிஜித் கங்கோபாத்யாயை தங்கள் கட்சி வரவேற்கும் என்றார். “அவர் ஊழலுக்கு எதிரான போராட்ட வீரர். அவர் காங்கிரசில் சேர விரும்பினால், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம். அவர் ஒரு போராளி. அவர் பா.ஜ.க.,வில் இணைந்தால், சித்தாந்த ரீதியாக அவரை ஆதரிக்க முடியாது,” என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார். மேற்கு வங்கத்தில் கங்கோபாத்யாய் முதலமைச்சராக இருப்பதை தான் விரும்புவதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஒருமுறை கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“