ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கடந்த மே 3-ந் தேதி நடைபெற்ற லீக் போட்டியில், சி.எஸ்.கே – ஆர்.சி.பி அணிகள் மோதியது. இந்த போட்டியில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி ஒருவர், பாலியல் தொடர்பான பிரச்னைகளை சந்தித்தாக புகார் அளித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Case filed as families of IPS officer, I-T commissioner fight over seat during RCB-CSK match at Bengaluru stadium
கடந்த மே 3-ந் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். விஐபிக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த டைமண்ட் பாக்ஸில் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் குழந்தைகளும் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த அதிகாரியின் மனைவி கழிவறைக்கு சென்றுவிட்டு தனது இருக்கைக்கு திரும்பி வந்தபோது, வருமான வரி ஆணையர் ஒருவர் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது சகோதரர் அந்த நபரிடம் இருக்கையை விட்டு விலகுமாறு கூறியும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்மணி திரும்பி வந்ததும் அவரும் தனது இருக்கையை கேட்டபோது வாக்குவாதம் மேலும் முற்றியது.
வருமான வரி ஆணையரின் மனைவியும் இந்த வாக்குவாதத்தில் இணைந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைமண்ட் பாக்ஸில் இருந்த மற்ற உயர் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த மோதலை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பெண்மணி தனது பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் உடனடியாக அவர்கள் மைதானத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி க்யூபன் பார்க் காவல் நிலையத்தில் வருமான வரி ஆணையர் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் (Bharatiya Nyaya Sanhita - BNS) பிரிவுகள் 75(1) (பாலியல் துன்புறுத்தல், இதில் விரும்பத்தகாத சைகைகள் அடங்கிய உடல் ரீதியான தொடர்பு), 79 (பெண்ணின் அடக்கத்தை அவமதித்தல்), 351(1) (குற்றவியல் மிரட்டல்) மற்றும் 352 (சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், "சுமுகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம், இரு தரப்பினரின் ஈகோ மோதல் காரணமாக தற்போது விசாரணையாக மாறியுள்ளது" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.