திரிணாமுல் காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான கேள்வி கேட்க பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக லோக்பால் அனுப்பிய புகாரை மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) "விசாரணை" செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Cash-for-query’ row: CBI begins probe into Lokpal complaint on Mahua
ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பான லோக்பால் அமைப்பிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கடிதம் வந்துள்ளதாகவும், மஹூவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
மஹூவா மொய்த்ரா தனது பார்லிமென்ட் பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் ஹிராநந்தனி "தேவைப்படும் போது மஹூவா மொய்த்ரா சார்பாக நேரடியாக கேள்விகளை பதிவிட" முடியும்.
மஹூவா மொய்த்ரா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, லோக்பால் தனது புகாரை சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் முன்பு தெரிவித்திருந்தார். "லோக்பாலின் விசாரணை அமைப்பான சி.பி.ஐ.,க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்," என்று நிஷிகாந்த் துபே இந்த மாத தொடக்கத்தில் கூறினார்.
மஹூவா மொய்த்ரா சம்பந்தப்பட்ட கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் நிஷிகாந்த் துபே இரண்டு கடிதங்களை எழுதிய பிறகு வெளிவந்தன - ஒன்று ஹிராநந்தனி குழுமத்தின் நலனைப் பாதுகாக்க மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்; மற்றொன்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவிடம், மக்களவைக்கான மஹூவா மொய்த்ராவின் உள்நுழைவுச் சான்றுகளின் ஐ.பி முகவரிகளை வேறு யாராவது அணுகியிருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கும்படி அவரை வலியுறுத்தினார்.
நவம்பர் 9 அன்று, குற்றச்சாட்டுகளை விசாரித்த மக்களவையின் நெறிமுறைக் குழு, "நெறிமுறையற்ற நடத்தை" மற்றும் "கடுமையான தவறான செயல்களுக்காக" அவரது எம்.பி பதவியை பறிக்க பரிந்துரை செய்யும் வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்டது. இந்த முடிவுக்கு உடன்படாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நெறிமுறைக் குழு தனது விசாரணையை "முறையற்ற அவசரத்தில்" மற்றும் "முழுமையான தகுதியின்மையுடன்" நடத்தியதாக தங்கள் மறுப்புக் குறிப்புகளில் கூறியுள்ளனர்.
மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான புகார் தொடர்பாக நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் ஆகியோரிடம் நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. மறுபுறம், ஹிராநந்தனி நெறிமுறைக் குழுவிடம் உறுதிமொழிப் பத்திரத்தில், "தேவைப்படும் போது அவர் சார்பாக நேரடியாக கேள்விகளை பதிவிட" முடியும் வகையில், மஹூவா மொய்த்ரா தனது பாராளுமன்ற பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை தனக்கு வழங்கியதாகக் கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், மஹூவா மொய்த்ரா தனது பாராளுமன்ற உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் விவரங்களை ஹிராநந்தனியிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால் சி.பி.ஐ.,க்கு ஜெய் அனந்த் தெஹாத்ராய் அளித்த புகாரில் கூறியது போல், அவரிடம் இருந்து பணம் பெறவில்லை என்று உறுதியாக மறுத்தார்.
மஹூவா மொய்த்ராவின் உறுப்பினர் போர்டல் ஜூலை 2019 முதல் ஏப்ரல் 2023 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து “47 முறை இயக்கப்பட்டது” என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது என்று நெறிமுறைக் குழு அறிக்கை கூறியுள்ளது.
மஹூவா மொய்த்ரா, ஹிராநந்தனியிடம் இருந்து "பணத்தை பெற்றது" என்பது, "பலனடையும் விவகாரம்" என்று குறிப்பிட்ட நெறிமுறைக் குழுவின் அறிக்கை, குற்றவியல் விசாரணை மற்றும் பண விசாரணையை வெளிக்கொணரும் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் அதற்கு இல்லை, மேலும் இது "சட்ட, நிறுவன மற்றும் காலக்கெடுவுக்குள்" அரசாங்கத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
மஹூவா மொய்த்ரா இந்த முடிவை "குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரம் இல்லாத நிலையில், திட்டமிட்டு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“