பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியானது. அமைச்சரவையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகளை டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Caste survey to be part of upcoming population census
அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். காங்கிரஸை விமர்சித்த வைஷ்ணவ், காங்கிரஸ் மற்றும் அதன் இந்தியா கூட்டணி கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் காரணங்களுக்காக அடிக்கடி பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறிவிட்டன என்றும் அதன் ஆய்வுகளை மட்டுமே நடத்தியுள்ளன என்றும் அவர் கூறினார். சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடத்தப்பட்ட அனைத்து மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளிலும் சாதி சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியை நினைவு கூர்ந்த வைஷ்ணவ், "2010-ல் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் மக்களவையில் உறுதியளித்தார். இதனை பரிசீலிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. மேலும் பல கட்சிகள் இதையே பரிந்துரைத்தன. இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதிவாரி ஆய்வை மட்டுமே நடத்தியது. காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்பது நன்கு புரிந்திருக்கிறது" என்று கூறினார்.
பீஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டன. தெலுங்கானா மாநிலத்திலும் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அளவில் ஜாதி வாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு நடத்தவேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறி வந்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் இந்த கோரிக்கையை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.