/tamil-ie/media/media_files/uploads/2018/05/s71.jpg)
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் தமிழத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துத் தீர்ப்பு கூறியது. மேலும் இதனை நடைமுறைப்படுத்தத் தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வாரியம் அமைக்க மார்ச் 29 தேதியை இறுதி காலக்கெடுவாக அறிவித்த நிலையில், மத்திய அரசு இதனை இன்று வரை பின்பற்றவில்லை.
மேலும் இறுதி கெடு முடிவடையும் நேரத்தில், தீர்ப்பில் குறிப்பிட்ட ‘ஸ்கீம்’ வார்த்தை குறித்து விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்தபோது, தீர்ப்பைப் பின்பற்றாத மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. பின்னர் மே 3ம் தேதிக்குள் காவிரி விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 2வது காலக்கெடு முடிந்தும், வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. கர்நாடகா தேர்தல் வேலைகளில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் செயல்பட்டு வருவதால் ஒப்புதல் பெற இயலவில்லை எனவே கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த விளக்கத்திற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து, மே மாதம் 4 டிஎம்சி நீரைத் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என்று உத்தரவு அளித்தது. இருப்பினும், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது. மேலும் மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க இயலாது என அறிக்கை தாக்கல் செய்தது கர்நாடகம்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு விரைவில் காவிரி நீர் திறக்க வேண்டும், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே வழக்கில் மத்திய அரசு நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டிய காவிரி வரைவு திட்ட அறிக்கை குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையின் போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக மிகக் கடுமையான வாதங்களை முன்வைத்தது.
மத்திய அரசு தனது வாதத்தின் போது, 'சட்டம் , ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக காவிரி விவகாரத்தில் முடிவெடுக்க முடியவில்லை. கர்நாடக தேர்தலால் காவிரி திட்ட விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளோம்' என்று தெரிவித்தது.
இதையடுத்து தமிழக அரசு, 'சட்டம், ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி தீர்ப்பை அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொல்வதெல்லாம் ஒரு பதிலா? மத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு காவிரி நீர் கூட எங்களுக்கு கிடையாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாதவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்" மிகக் காட்டமாக வாதிட்டது.
இதைத் தொடர்ந்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "காவிரி தீர்ப்பை அமல்படுத்தாதது உச்சநீதிமன்ற அவமதிப்பு செயலாகும். வரைவு செயல்திட்டம் இந்நேரம் தயாராகி இருக்க வேண்டும். தீர்ப்பை அமல்படுத்துவதற்கான அமைப்பு உருவாகி இருக்க வேண்டும்
கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி தேர்தல் நடக்கும் நிலையில், காவிரி நதிநீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கை மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். வரைவுத் திட்டம் பற்றி மத்திய நீர் வளத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும். மேலும், 14ம் தேதி காவிரி சட்ட வரைவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.