/tamil-ie/media/media_files/uploads/2018/04/a862.jpg)
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த காலக் கெடுவுக்குள் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இதனால், மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்று சினிமாத் துறையினரும் வாரியம் அமைக்கக் கோரி மவுன போராட்டம் நடத்தினர். சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி என வெளிநாடுகளிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று, கர்நாடகாவிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும், மற்ற அதிகாரிகளும் நேரடியாக விசாரணையை பார்த்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "ஒவ்வொரு முறையும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மே 3ம் தேதிக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
நடுவர்மன்ற தீர்ப்பை இணைத்தே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம். காவேரி மேலாண்மை வாரியம் என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஸ்கீம் என்பது பற்றி தற்போதும் எதுவும் சொல்ல முடியாது. காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னர் தான் ஸ்கீம் குறித்து விளக்கம் அளிக்க முடியும்" என்று தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us