கர்நாடகா- தமிழ்நாடு இடையே காவிரி நீர் விவகாரம் முற்றி வருகிறது. காவிரி அணைகளில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, கர்நாடகா வழங்க வேண்டும் என அம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை செயல்படுத்துவதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு முறைப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகா அரசு வழங்க வில்லை எனக் குற்றஞ்சாட்டியது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் திறக்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வில்லை எனக் கூறியது. மேலும் காவிரியில் போதிய நீர் திறக்கப்படாததால் தமிழகத்தில் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு கர்நாடக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம் இதுகுறித்து ஆலோசனை நடத்தவும் உத்தரவிட்டது.
நாளை விசாரணை
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், அடுத்த 15 நாட்களுக்கு 24,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், அணைகளில் போதிய நீர் வரத்து இல்லாததால் 3,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறந்துவிட முடியும் எனக் கூறினர். இந்நிலையில், கூட்டத்தின் முடிவில் காவிரியில் இருந்து 5,000 கனஅடிநீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். நாளை (செப்.1) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விவாதிக்க உள்ளது.
விவசாயிகள் போராட்டம்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வழக்கு, காவிரி பிரச்சனை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த கர்நாடக நீர்பாசத் துறை அமைச்சர் டி.கே சிவகுமார் இன்று(ஆகஸ்ட் 31) டெல்லி செல்கிறார். கர்நாடகாவின் நீர் ஆதாரத்தை காப்பாற்றும் வகையில், வழக்கறிஞர்களை சந்தித்து யோசனைகள் மற்றும் மாநிலத்தின் நிலையை எடுத்துரைக்க உள்ளதாக கூறினார்.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து கே.ஆர்.எஸ் அணை முன்பு இரவு முழுவதும் கையில் தீப்பந்தம் ஏந்தி கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கட்சியின் சட்டமன்ற பிரதிநிதி தர்ஷன் புட்டனய்யா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனால் இவ்விவகாரத்தில் இரு மாநிலங்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“