காவிரி நீர் பங்கிட்டு வழங்குவதை கண்காணிப்பதற்காக, மத்திய நீர்வளத்துறை ஆணையர் தலைமையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
காவிரி ஆணையம் கூட்டம்
இதனிடையே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் சுமார் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு, டெல்லியில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டம், அதன் தலைவர் மசூத் ஹூசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது குறித்து கேள்வி எழுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து, இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட நீரின் அளவு, கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீரின் அளவு, கர்நாடகம், தமிழக அணைகளில் உள்ள நீர் இருப்பு விபரம் ஆகியவை குறித்தும் மாதாந்திரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.