காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்குக் காவிரி குழு அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. காவிரி குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல காலக்கெடுக்களை அளித்து வந்தது. மார்ச் 29ம் தேதி முதல் இழுபறியாக இருந்து வந்த விவகாரத்தில் சிறிது முன்னேற்றம் காண்பிக்கும் வகையில், கடந்த திங்கள் கிழமை காவிரி வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றத்தில் மே 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட வரைவு திட்ட அறிக்கையில், ‘தமிழகத்தில் காவிரி வாரியத்திற்கு இணையான குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கும். 10 பேர் கொண்ட இந்தக் குழுவில், கர்நாடகம், தமிழகம் உட்பட 4 மாநிலத்தின் உறுப்பினர்கள் அமர்த்தப்படுவார்கள். இந்தக் காவிரி குழுக்கான செலவீட்டுகளை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கக் காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், சட்ட ஒழுங்கைப் பின்பற்றி பணிபுரியும் குழுவுக்கான செலவுகளின் மதிப்பீடும் ஒதுக்கப்பட்டது. இதில், 40% தமிழ்நாடு, 40% கர்நாடகா, 15% கேரளா மற்றும் 5% புதுச்சேரி என 4 மாநிலங்களுக்கும் செலவு பங்கு ஒதுக்கீடு செய்து மத்திய அரசு திட்டம் தாக்கல் செய்தது.
மத்திய அரசின் இந்த வரைவு திட்ட தாக்கலில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து 4 மாநிலங்களும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மே 16 (இன்று) ஒத்திவைத்தது.
‘காவிரி வரைவு திட்ட அறிக்கை’ குறித்த விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வர உள்ளது. காலை 11.30 மணிக்கு மேல் வரும் இந்த விசாரணையில், மத்திய அரசி தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ஏற்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
மதியம் 1.30 : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். (காவிரி அமைப்பு தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்பட கூடாது. அதற்கு பதில் டெல்லியில் தலைமையகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம்.)
மதியம் 1.06 : காவிரி குழுவுக்கு ‘வாரியம்’ என்று பெயர் வைக்க தமிழகம் கோரினால், கர்நாடகா அதனை முற்றிலுமாக எதிர்க்கும் : கர்நாடக அரசு வழக்கறிஞர் மோகர் கட்டார்கி.

மதியம் 12.48 : காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் சில முக்கிய விஷயங்களை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. “நீர்ப்பங்கீடு தொடர்பாக அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும்.
நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக் கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது.” என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
மதியம் 12.37 : காவிரி குழுவிற்கு “வாரியம்” என்று பெயர் சூட்ட கர்நாடகாவும் ஒப்புதல் அளித்துள்ளது.
மதியம் 12.33 : காவிரி குழுவிற்கு “வாரியம்” என்று பெயரிட மத்திய அரசு ஒப்புதல்
மதியம் 12.27 : காவிரி வழக்கு விசாரணையை நாளை (மே 17) ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநில அரசின் கோரிக்கைகளுக்கு நாளை பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு.
மதியம் 12.25 : காவிரி நீர்ப்பங்கு கேரளாவுக்கு 4% மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், செலவுகளை மட்டும் 15% எவ்வாறு ஏற்க முடியும் என கேரள அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
மதியம் 12.12 : தமிழகத்தின் கோரிக்கைகளை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
“புதிய அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் இருக்க கூடாது. புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.” என்ற கோரிக்கைகள் உச்சநீதிமன்றம் நிராகரிப்பு.
காலை 12.01 : காவிரி வழக்கு விசாரணை தொடங்கியது. மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், 4 மாநிலங்களின் பதில் குறித்த விசாரணை துவங்கியது.
காலை 11.15 : காவிரி வழக்கில் இன்று பதில் அளித்த கர்நாடக அரசு, “ஒரு சில அம்சங்களை தவிர பிற அம்சங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறோம். காவிரி நீரை பயன்படுத்த ஒவ்வொரு முறையும் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதி வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.
காலை 11.13 : மத்திய அரசின் காவிரி வரைவு திட்டத்தை ஏற்பதாக கர்நாடகம் பதில் அளித்துள்ளது.
காலை 11.00 : கர்நாடக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்.