தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கு உரிய காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டில்லியில் இன்று (ஜூன் 25) மசூத் உசேன் தலைமையிலான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
வலியுறுத்தல் : ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி., தண்ணீர் இதுவரை வழங்கவில்லை. இன்றைய கூட்டத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. காவிரிப்படுகையில் எந்த அணையும் கட்டுவதற்கு கர்நாடகத்தை அனுமதிக்க கூடாது என்றும் தமிழகம் வலியுறுத்தியது. கர்நாடகா, காவிரியில் உரிய ஒதுக்கீட்டு நீரை தமிழகத்திற்கு திறந்துவிடாததால், மேட்டூரில், ஜூன் 12ம் தேதி அணை திறக்க முடியவில்லை. நீர் திறப்பை கண்காணிக்க தகுதி வாய்ந்த பொறியாளர்களை நியமிக்க வேண்டும். காவிரி நீர் கண்காணிப்பு ஆணையத்தை பெங்களூரில் கூட்ட வேண்டும். வரும் ஜூலை மாதத்திற்கு காவிரியில் 31.24 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.
உத்தரவு : இதனை தொடர்ந்து, காவிரி ஆணையம் பிறப்பித்த உத்தரவு: காவிரியில் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும். காவிரியில் நீர் வரத்து மற்றும் மழையை பொறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைவு : பின்னர் காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் கூறியதாவது:கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து தொடர்பான புள்ளி விவரங்கள் கிடைத்தது. அணைகளுக்கு நீர் வரத்து குறைவாக உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு மிக குறைவு. அணைகளுக்கு மிகக்குறைவான தண்ணீரே வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தென் மேற்கு பருவமழை பெய்யும் என நம்புவோம். இதன் மூலம் பிரச்னை தீரும்.காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும், அணைகளில் தண்ணீர் இருந்தால் தான் தண்ணீர் திறக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.