இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக கடந்த மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த 4 ஆம் தேதி முன்கூட்டியே வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண் என பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
பல்வேறு முறைகேடு புகார் கிளம்பி இருப்பதால் இந்த தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிலான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: CBI arrests two from Patna in NEET-UG case for ‘arranging accommodation for examinees’
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் குஜராத்தில் 5 பேர், பீகாரில் 13 பேர் என அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் இரண்டு பேரை மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) அதிகாரிகள் கைது செய்தனர்.
மணீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் நீட்-யு.ஜி தேர்வாளர்களுக்கான தங்குமிடத்திற்கான ஏற்பாடுகளை மே 4 அன்று, தேர்வுக்கு ஒரு நாள் முன்பு செய்ததாகக் கூறப்படுகிறது. அதே நாளில் அவர்கள் தீர்க்கப்பட்ட வினாத்தாளை மனப்பாடம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் நான்கு பேர் தேர்வாளர்கள் ஆவார். மேலும் ஐந்து பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
அசுதோஷ் குமார் என்பவரின் வேண்டுகோளின் பேரில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக பாட்னாவைச் சேர்ந்த மணீஷ் பிரகாஷை சி.பி.ஐ முதலில் கைது செய்த நிலையில், அசுதோஷ் குமாரை பின்னர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது தொடர்பாக பிரகாஷின் மனைவி அர்ச்சனா கூறுகையில், “எனது கணவர் கைது செய்யப்பட்டதாக மதியம் 1.30 மணியளவில் சி.பி.ஐ என்னை அழைத்தது. அவர் ஒரு சமூக சேவகர், அவர் மாணவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மக்களுக்கு அடிக்கடி உதவுவார். நான்கைந்து மாணவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யாரோ அவரிடம் தொலைபேசியில் கேட்பதைக் கேட்டிருந்தேன். இப்போது அவர் சிக்கியிருக்கும் இந்த பெரிய சிக்கலைப் பற்றி எங்களுக்குத் தெரியாது." என்றார்.
அவரது நாளந்தா கிராமத்தில் இருந்து தலைமறைவாக உள்ள பிரதான குற்றவாளியான சஞ்சீவ் முகியாவைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ புதன்கிழமை முயன்றது. முகியா நேபாளத்திற்கு தப்பிச் சென்றதாக ஏஜென்சி சந்தேகிக்கின்றது.
பீகார் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மற்றொரு முக்கிய குற்றவாளியான சிக்கந்தர் யாதவேண்டு பற்றிய கூடுதல் தகவல்களும் ஏஜென்சிக்கு கிடைத்துள்ளன. யாதவேந்து நான்கு தேர்வாளர்களை 'செட்டர்ஸ்' நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மையத்திற்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், பாட்னாவில் உள்ள 17 பேருக்கு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சி.பி.ஐ கிரிமினல் வழக்கை பதிவு செய்த பிறகு, பீகார் மற்றும் குஜராத் மாநில அரசுகள் தங்கள் உள்ளூர் நீட்-யுஜி "வினாத் தாள் கசிவு" வழக்குகளை மத்திய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டன.
தேர்வு சீர்திருத்தங்கள் மற்றும் என்.டி.ஏ-வின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழுவை கல்வி அமைச்சகம் சனிக்கிழமையன்று அறிவித்தது. சனிக்கிழமையன்று என்.டி.ஏ தலைவராக இருந்த சுபோத் குமார் சிங்கையும் அமைச்சகம் நீக்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.