காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான நிறுவன ஊழியர்கள் மீது அக்டோபர் 20 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 2 தீவிரவாதிகள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட M4 கார்பைன் தாக்குதல் துப்பாக்கி மற்றும் AK-47 ஆகியவற்றை ஏந்தியபடி, தொழிலாளர்கள் முகாமில் சுமார் 7 நிமிடங்கள் இருந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் எனத் தெரியவந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை பார்க்கையில் தீவிரவாதிகள் அப்பகுதியை நன்கு அறிந்துவைத்துள்ளதாக தெரிகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர். அக்டோபர் 20 தாக்குதலில் புலம் பெயர் தொழிலாளர்கள் 6 பேர், ஒரு உள்ளூர் மருத்துவர் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்-சோனாமார்க் நெடுஞ்சாலையில் Z-Morh சுரங்கப்பாதையை அமைக்கும் APCO Infratech என்ற உள்கட்டமைப்பு நிறுவனத்தில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இரவு 7.25 மணியளவில் தொழிலாளர்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த முகாம் சுரங்கப் பாதை அமைக்கப்படும் சாலைக்கு சற்று கீழே உள்ளது, மேலும் ஒருபுறம் தரிசு மலைகளாலும், மறுபுறம் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையாலும் சூழப்பட்டுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். “அவர்கள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லை. அடுத்து அவர்கள் சென்ற பகுதியில் தான் சிசிடிவி கேமரா இருந்துள்ளது.
அதில் இருவர் முகாமில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்துவது பதிவாகியுள்ளது. மேலும் அவர்கள் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு அங்கிருந்த மெஸ் உணவு அருந்தும் இடத்தை குறிவைத்தனர்.
ஆங்கிலத்தில் படிக்க: CCTV footage of Valley attack: Militants had M4 carbine, AK-47; at camp for 7 mins
மேலும், தீவிரவாதிகள் முகாமில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் கைக்குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலரின் வாக்குமூலம் படி, முதலில் நாங்கள் சிலர் பட்டாசு வெடிப்பதாக நினைத்தோம். ஆனால், இரண்டு மூன்று நிமிடங்களில், அது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“