கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமான பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்டுவதற்காக, ராஜ்காட் வளாகத்தில் உள்ள ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் மத்திய அரசு நிலம் ஒதுக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Former President Pranab Mukherjee to get memorial at Delhi’s Rajghat complex
இது தொடர்பாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திலிருந்து தனக்கு கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பிரணாப் முகர்ஜியின் மகளும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 26, 2024 அன்று மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு இன்னும் வெளியிடாத நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு, ஷர்மிஸ்தா முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். "இதற்காக நாங்கள் கோரிக்கை முன்வைக்காத நிலையிலும், நினைவிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமரின் இந்த நடவடிக்கையால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். உரிய கௌரவத்தை கேட்காமலே அரசு வழங்கும் என்று என் தந்தை கூறுவார். பிரதமரின் இந்த செயலுக்கு நாங்கள் கடமைபட்டுள்ளோம். விமர்சனங்களுக்கு, பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்ட இடத்தில் என் தந்தை இருக்கிறார். ஆனால், அவரது மகளாக இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை" என ஷர்மிஸ்தா முகர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் குடியரசு தலைவர்கள், பிரதமர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படுவது வழக்கம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடமும் இதே இடத்தில் அமைந்துள்ளது.