ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 175 இடங்களில் 150 இடங்களில் முன்னிலை பெற்று விரிவான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Tide turns for Chandrababu Naidu as TDP-led alliance set for big win in Andhra
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக ஆந்திரப் பிரதேச சி.ஐ.டி-யால் கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக வர உள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை என கருதப்படும் நேரத்தில், லோக்சபா தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியின் செயல்பாடு அவரை தேசிய அளவில் முக்கிய தலைவராக மாற்றும்.
2019 சட்டமன்றத் தேர்தலில் 151 இடங்களுடன் அமோக வெற்றி பெற்ற ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தற்போது 20 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதன் பெரும்பாலான அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும், முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது மூத்த அமைச்சர் போட்சா சத்தியநாராயணா ஆகியோர் மட்டுமே புலிவெந்துலா மற்றும் சீப்புரிபள்ளே தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
கடந்த முறை 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சி தற்போது தனித்து 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி, கடந்த முறை 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை ஜன சேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களில் 19 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க 10 தொகுதிகளில் 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
சந்திரபாபு நாயுடு குப்பத்திலும், ஜன சேனா கட்சி தலைவர் கே. பவன் கல்யாண் பிதாபுரத்திலும் முன்னிலை வகிக்கின்றனர்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் தலைமையகம் தடேபல்லையில் செவ்வாய்க்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் படிப்படியாக வெளியேறினர்.
12 சட்டமன்றத் தொகுதிகளில் 8 இடங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்த பிரகாசம் மாவட்டத்தைத் தவிர, கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்களில் உள்ள 34 இடங்கள் மற்றும் ராயலசீமா பகுதியில் 52 இடங்கள் உட்பட மீதமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி - பாஜக - ஜன சேனா கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
ஆரம்பகால போக்குகள் கிராமப்புற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இடையேயான சண்டையை சுட்டிக்காட்டியிருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முன்னேறும் போது அலை இறுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக மாறியது.
பல ஒய்.எஸ்.ஆர்.சி.பி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், முதல்வர் ஜெகனின் தேர்தல் முழுக்க முழுக்க நலத்திட்டங்களில் கவனம் செலுத்தியதே கட்சியை வீழ்த்தியதாகக் கூறினர். இருப்பினும், அரசியல் பார்வையாளர்கள் சந்திரபாபு நாயுடுவின் கைது, ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியின் போது மாநிலத்தில் புதிய திட்டங்கள் அல்லது தொழில்கள் வராதது மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி மனநிலை போன்றவற்றையும் சுட்டிக்காட்டினர்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி மார்ச் வரை வலுவான நிலையில் இருந்ததாகத் தோன்றினாலும், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா கட்சி ஆகியவை பின்னணியில் தங்கள் களத்தை வலுப்படுத்திக் கொண்டிருந்தன. பின்னர், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் பா.ஜ.க அவர்களின் கூட்டணியில் இணைந்தபோது ஊக்கம் பெற்றது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி நாயுடு கைது செய்யப்பட்டபோது, ஜெகனின் அடாவடித்தனம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பரிதாப உணர்வு அவரது கட்சிக்கு உதவியதாகத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“