/indian-express-tamil/media/media_files/2025/09/07/chandragrahanam-2025-09-07-09-17-41.jpg)
புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், பொதுமக்கள் சந்திர கிரகணத்தை தொலைநோக்கிகள் மூலம் இலவசமாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானியல் ஆர்வலர்கள், மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.
இன்று இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 11.43 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் நடை சாத்தப்பட உள்ளது. கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் இரவு 7 மணி முதல் நடை சாத்தப்படும். அதற்கு முன், மாலை 5.30 மணிக்கு பௌர்ணமி அபிஷேகம் நடைபெறும்.
மணக்குள விநாயர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர், வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன், அரியாங்குப்பம் திரவுபதியம்மன், தவளக்குப்பம் முத்தாலம்மன், பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன், அபிஷேகப்பாக்கம் போத்தியம்மன், நோணாங்குப்பம் மன்னாதீஸ்வரர் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களும் மூடப்பட உள்ளன.
திருபுவனை தென்கலை வரதராஜ பெருமாள், திருவண்டார் கோவில் பஞ்சநதீஸ்வரர் சிவன், சன்னியாசிகுப்பம் சப்தரிஷிகள் மாதா, வராகி அம்மன், காளி கோவில், மதகடிப்பட்டு குழி மகாதேவர் மற்றும் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி கோவில் ஆகிய கோவில்களும் மாலை முதல் மூடப்படும். கிரகணம் முடிந்ததும், நாளை (திங்கட்கிழமை) காலை முதல் அனைத்து கோவில்களிலும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே கோவில்கள் மீண்டும் திறக்கப்படும் என கோவில் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் அரிய முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) நடைபெற உள்ளது. இதை வெறும்கண்களால் காண முடியும். சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் தென்பட்டது. அதைத்தொடர்ந்து முழு சந்திர கிரகணம் இன்று (செப்.7) நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.57 முதல் 1.27 மணி வரை மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். இதில் முழு சந்திர கிரகணம் 11.42 முதல் 12.33 மணி வரை தென்படும். அப்போது சந்திரன் அடர்சிவப்பு நிறத்தில்மிளிரும்.
இது ரத்த நிலா (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின்கிழக்கு பகுதி, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும். குறிப்பாக இந்தியாவில் சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில்தெளிவாக பார்க்க முடியும். இந்த முழு கிரகணத்தை வானம் தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம்.
இதற்கிடையே, இந்நிகழ்வை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட திருச்சி கோளரங்கம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் கிரகணம் விடும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இத்தகைய அரிய வானியல் நிகழ்வு இனிமேல் 2028 டிசம்பர் 31-ல் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரகணத்தின் போது உணவு அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கிய ஐதீகமாகும். இந்த நேரத்தில், பூமியின் மீது விழும் கிரகணத்தின் கதிர்வீச்சு, உணவை எளிதில் நஞ்சாக்கி, அதன் இயல்பு தன்மையை மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பு, சமைத்த உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் துளசி இலைகள் அல்லது அருகம்புல் போட்டு வைப்பது ஒரு முக்கியமான சடங்காக பின்பற்றப்படுகிறது.
கிரகணம் முடிந்தவுடன், குளிப்பது மிகவும் அவசியமாகும். இது, கிரகணத்தின் தாக்கத்திலிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது. இந்த மரபுகள், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளாகும்.
செய்தி: பாபுராஜேந்திரன், க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.