INX Media Case: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது. இந்த தீர்ப்பு காங்கிரஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திகார் சிறை வேண்டாம் என சிதம்பரம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்த நிலையில் செப்டம்பர் 19 தேதி வரை திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ சிறப்பு நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் ரூ.305 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை வெடித்தது.
இந்த புகாரில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதன் விசாரணையில் கடந்த 21ஆம் தேதி, ப.சிதம்பரத்தை அவரது வீட்டில் வைத்து சிபிஐ கைது செய்தது.
இந்த விசாரணை கடந்த 15 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. விசாரணையின் போது சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதற்கிடையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அமலாக்கத்துறை கைதை தவிர்க்கும் வகையில், ப.சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ப.சிதம்பரம் மீதான வழக்கில் விசாரணை சரியான வழியில் செல்கிறது எனக் கூறிய நீதிபதிகள், முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடையாது. அவர் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை சிதம்பரம் நாடலாம் என்று அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதையடுத்து ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யும் சூழலும் ஏற்பட்டது. சிதம்பரம் திகார் சிறை செல்வாரா? அல்லது அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.
இந்நிலையில் 2 நாட்கள் சிபிஐ காவல் நீடிப்பு முடிந்து இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு ப. சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும், திகார் சிறையில் அடைக்க வேண்டும், சிதம்பரத்தை வெளியில் விட்டால் அவர் ஆதரத்தை அழித்து விடுவார் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சிதம்பரம், விசாரணைக்காக அமலாக்கத்துறையினரிடம் தான் சரணடைய தயார் என்றும், 74 வயதில் தன்னால் திகார் சிறைக்கு செல்ல முடியாது என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் அவரின் கோரிக்கை நிராகரித்த நீதிபதிகள் சிதம்பரத்திற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி திகார் சிறையில் தனியறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தை அழைத்து செல்ல நீதிமன்ற வாசலில் சிபிஐ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக மற்றொரு வழக்கான ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் முன்ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு நடைப்பெற்றது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப. சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி இந்த உத்தரவை பிற்பித்தார்.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் முன் ஜாமின் வழங்கியது.
இசட் பிரிவு பாதுகாப்பு : சிதம்பரத்தை திகார் சிறையில் இசட் பிரிவு பாதுகாப்புடன் கூடிய தனிச்சிறையில் அடைக்க சிறப்பு நீதிபதி அஜய் குமார் குஹார் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி மீது பழிவாங்கும் நடவடிக்கை - காங்கிரஸ் ஜாமின் கிடைக்க வாய்ப்பு இருந்தநிலையில், மத்திய அரசின் தூண்டுதலால், சிதம்பரத்திற்கு ஜாமின் மறுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி கூறியதாவது, எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாகவே, சிதம்பரத்தின் கைது உள்ளதாக அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.