/tamil-ie/media/media_files/uploads/2018/03/a743.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வாரியம் அமைப்பதில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம். தேர்தல் நடத்தை விதி காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று அறிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. எனவே, கர்நாடக அரசால் எந்த ஒரு நலத்திட்டங்களையும் அறிவிக்க முடியாது.
பேரிடர் மீட்பு போன்ற நடவடிக்கைகளை தவிர வேறு எந்த வகை நடவடிக்கைகள் மூலமும் மக்களை ஈர்க்க அரசுகள் முயற்சி செய்ய கூடாது. கர்நாடகாவில் மத்திய அரசும் எந்த நலப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எனவே நடத்த விதிமுறைகள் அமலுக்கு வருவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாக வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் தேர்தல் அறிவிப்பை காரணமாக கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு தவிர்த்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 11. 30 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்திடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இருக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வாரியம் அமைப்பதில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றலாம். தேர்தல் நடத்தை விதி காவிரி விவகாரத்திற்கு பொருந்தாது" என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.