இந்து பெண்களை தொட்டால், தொட்டவர்கள் கையை வெட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சராக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர் கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியை சேர்ந்தவர். இவர் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக் கொள்வார்.
சில மாதங்களுக்கு முன்பு மதசார்பின்மையாளர்கள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த இவர், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில்,தற்போது மற்றொரு கருத்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, ”கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்கு இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். இது இந்துக்கள் மீது பட்டபகலில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை. இவ்விவகாரத்தில் கேரள அரசு முழுமையாக தோல்வி அடைந்துள்ளது.
மேலும், சாதியால் நம் வலிமையை இழந்திருக்கிறோம், நமது சமுதாயத்தின் முன்னுரிமைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். நம்மிடையே மாற்றம் ஏற்பட வேண்டும். சாதியை பற்றி சிந்திக்கக் கூடாது” என்று கூறினார்.
இந்நிலையில், சாதியை விட்டுவிடுங்கள் இந்து பெண்கள் மீது யாராவது கையை வைத்தால், அவர்களது கையை வெட்ட வேண்டும் என்று அவர் ஆவேசமாக பேசியுள்ளார். அனந்தகுமாரின் இந்த பேச்சை எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்துள்ளனர்.