அமெரிக்காவின் உளவு அமைப்பான சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (சிஐஏ) ஆண்டு தோறும் ஃபேட்புக் என்ற தகவல் அறிக்கையை வெளியிடும். 267 நாடுகளின் பார்வைக்கு வைக்கப்படும், இந்த அறிக்கையில் உலக நாடுகளின் வரலாறு, மக்கள், அரசாங்கம், பொருளாதாரம், புவியியல் அமைப்பு, தொலைத்தொடர்பு, போக்குவரத்து வசதிகள், இராணுவம், மற்றும் இதர பிரச்சனைகளைப் பற்றி தகவல் அறிக்கையினை தயார் செய்து ஆண்டு தோறும் வெளியிடும்.
இந்த தகவல் அறிக்கையினை உருவாக்கும் செயல்பாட்டினை 1962ல் இருந்து செய்து கொண்டிருக்கின்றது அமெரிக்க அரசாங்கம். 1975ல் இருந்து இது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வருடம் சிஐஏவினால் தயாரித்து வெளியிட்டுருக்கும் இப்பட்டியலில், விஷ்வ ஹிந்து பரிசத் (விஹெச்பி) மற்றும் பஜ்ரங் தாள் போன்ற இந்துத்துவ அமைப்புகளை மதவாதம் சார்ந்த தீவிரவாத அமைப்புகளாக அறிவித்திருக்கின்றது.
அரசியல் அமைப்பினை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் மதவாத குழுக்களின் பட்டியியலில் இவ்விரண்டு குழுக்களின் பெயர்களையும் இணைத்திருக்கின்றது. இக்குழுக்கள் அரசியல் அமைப்பிற்கு அதிக அழுத்தம் தரும் என்றாலும், இவர்களின் தலைவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள்.
இப்பட்டியலில், இந்தியாவில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ், ஹுரியத், ஜமியத் உலேமா – இ ஹிந்த் போன்ற அமைப்புகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தேசியவாத குழுவாகவும், ஹுரியத்தினை பிரிவினைவாத அமைப்பாகவும் பதிவு செய்திருக்கின்றது அந்த தகவல் அறிக்கை.
பாஜகவின் சம்வத் அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் இதைப்பற்றி தெரிவிக்கும் போது, இத்தகவல்கள் யாவும் போலியானது. இது தொடர்பாக சிஐஏ ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். மேலும், ”விஷ்வ ஹிந்து பரிஷாத் மற்றும் பஜ்ரங் தாள் தீவிரவாத இயக்கங்கள் இல்லை. அவை தேசத்தின் வளர்ச்சிக்காக இயங்கிவரும் இயக்கங்கள்” என்றும் கூறியிருக்கின்றார்.