டெல்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வன்முறை போராட்டங்களில் ஈடுபட்ட வெளியாட்களை டெல்லி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர். இன்று காலை சாரை ஜூலினா மற்றும் மதுரா ரோடு போராட்டங்கள் வெடித்ததை அடுத்து அவர்கள் வளாகத்திற்குள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி ஆகியவற்றை மேற்கொண்டனர். இரண்டு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு நான்கு தீயணைப்பு வாகனங்கள் வந்து போராடி தீயை அணைத்தன.
டெல்லி தீயணைப்பு படையினர் கூறுகையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீயணைப்பு வாகனங்களில் ஒன்றை வழிமறித்து தடுத்து சேதப்படுத்தினர். இந்த வன்முறையில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.
டெல்லியில் வன்முறை ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சுக்தேவ் விஹார் மெட்ரோ நிலையத்தின் வாயில்களை ஞாயிற்றுக்கிழமை மாலை மூடியது. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஓக்லா விஹார் மற்றும் ஜசோலா விஹார் ஷாஹீன் பாக் ஆகியோரின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் இந்த மெட்ரோ நிலையங்களில் எந்த ரயில்களும் நிறுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
போராட்டம் காரணமாக ஓக்லா அண்டர்பாஸிலிருந்து சரிதா விஹார் வரை வாகன போக்குவரத்து மூடப்பட்டதாக டெல்லி போக்குவரத்து போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். பதர்பூர் மற்றும் ஆசிரம சவுக்கிலிருந்து வரும் வாகனங்கள் முற்றுகை காரணமாக மாற்று பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டன.
இருப்பினும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென் டெல்லியை உலுக்கிய வன்முறையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தனர். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகக் குழு ஒரு அறிக்கையில், “எங்கள் ஆர்ப்பாட்டங்கள் அமைதியானவை. வன்முறையில்லாதது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து பேணி வருகிறோம். இந்த அணுகுமுறையுடன் நாங்கள் நிற்கிறோம். வன்முறையில் ஈடுபடும் எந்தவொரு தரப்பினரையும் கண்டிக்கிறோம். உண்மையான எதிர்ப்புகளை இழிவுபடுத்தி மதிப்பிடுவதற்கு சில சக்திகளால் வன்முறையை முயற்சித்தனர்” என்று அவர்கள் கூறினர்.
மேலும், அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெடித்த வன்முறை போராட்டங்கள் வசிக்கும் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று ஜாமியா மாணவர்களும் முன்னாள் மாணவர் சங்கமும் தெளிவுபடுத்தினர்.
நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஜாமியா வளாகத்திற்கு வெளியே அணிவகுத்துச் சென்றதாகவும் வன்முறையில் ஈடுபட்ட சில வெளியாட்களை கைது செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஏற்கனவே குளிர்கால விடுமுறையை அறிவித்து, டிசம்பர் 13 சம்பவத்திற்குப் பிறகு செமஸ்டர் தேர்வை ஒத்திவைத்துள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள ஏராளமான மாணவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர். துணைவேந்தர் நஜ்மா அக்தர் மாணவர்களிடம் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாமியா மில்லியா ஆசிரியர்கள் சங்கம், மதுரா ரோடு சரய் ஜூலியனா ஆகிய இடங்களில் நடந்த வன்முறைகளைக் கண்டித்தது. ஆசிரியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜாமியா ஆசிரியர் சங்கம், தெற்கு டெல்லியில், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவுக்கு வெளியே நடந்த வன்முறையை கண்டிக்கிறது. ஜாமியா ஆசிரியர் சங்கம் அத்தகைய வன்முறையின் ஒரு பகுதியாக இல்லை. உள்ளூர் அரசியல் தலைவர்களின் இத்தகைய நோக்கமில்லாத எதிர்ப்புத் தலைமையிலிருந்து விலகி இருக்குமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது. ஜாமியா அமைதியைப் பின்பற்றுகிது. அமைதியைப் போதிக்கிறது. ஜாமியாவுக்கு அருகில் அல்லது இந்தியாவில் எங்கும் உள்ள அனைத்து வகையான வன்முறைகளையும் ஜாமியா ஆசிரியர் சங்கம் கண்டிக்கிறது. ஆர்ப்பாட்டங்களில் ஜாமியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்க திங்கள்கிழமை (16.12.2019) காலை 11:00 மணிக்கு ஜாமியா ஆசிரியர் சங்கம் அலுவலகத்தில் செயற்குழுவின் அவசரக் கூட்டத்துக்கு அழைக்கிறது. தயவுசெய்து அதில் கலந்துகொள்வது சரியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
அதே போல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைதியான போராட்டங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து டுவிட் செய்த கெஜ்ரிவால், யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. எந்தவொரு வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதது. போராட்டங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கையை பல்கலைக்கழக துணைவேந்தர் நஜ்மா அக்தர் கண்டித்தார். மேலும், அவர் “பல்கலைக்கழக நூலகத்திற்குள் இருந்த மாணவர்கள் வெளியே அழைத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர்” என்று கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்ததை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் தலைமை தேர்வு கண்காணிப்பாளர் வசீம் அகமது கான் உறுதிப்படுத்தினார். மேலும், “போலீசார் வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளனர். அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டு வளாகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார்கள்” என்றார்.
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில், போலீசார் நடவடிக்கையை சஷி தரூர் கண்டித்துள்ளார். “எந்தவொரு இந்திய அரசாங்கமும் தனது சொந்த இளைஞர்களுக்கு இப்படிச் செய்யும் என்று என்னால் நம்ப முடியவில்லை. காவல்துறையினரை மனிதாபிமானத்துடன் இருக்கும்படி கட்டளையிடுமாறு அமித் ஷாவிடம் முறையிடுகிறேன்” என்று அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.