கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி நிதிஉதவியாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
பினராயி விஜயன் 10 கோடி நிதியுதவி:
கடந்த 2 மாதங்களுக்கு கேரள மாநிலம் சந்தித்த பெரும் துயரம் உலக மக்களால் மறக்க முடியாத ஒன்று. கடவுளின் தேசமான கேரளா மழை வெள்ளத்தால் தத்தளித்தது.
சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரின் வீடுகளும் தண்ணீரிலில் மிதந்தன. வெள்ளக்காடாக காட்சியளித்த கேரளாவை இந்த மாபெரும் துயரத்தில் இருந்து மீட்க அண்டை மாநிலங்கள் கைக்கோர்த்தன.
குறிப்பாக, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரளாவை மீண்டும் மீட்டெடுக்க பல்வேறு உதவிகளை செய்தனர். தமிழகர்களை செயலை கண்டு வியந்த, நெகிழ்ந்த மலையாள சேட்டன்கள் தங்களது நன்றியை வீடியோ, கடிதம் மூலம் தெரிவித்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயனும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார். இந்நிலையில், கேரள சந்தித்த அதே சோதனையை கடந்த 2 வாரத்திற்கு முன்பு தமிழகமும் சந்தித்தது.
ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மோசமான நிலையை சந்தித்தனர். வீடு, நிலம், கால்நடைகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு உட்பட பலரும் நிதியுதவி உட்பட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், “எங்களுக்கு கைக்கொடுத்த தமிழர்களை நாங்கள் மறப்போமா” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும் தமிழகத்திற்கு 10 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம்,கேரள மாநில அமைச்சரவைக் கூட்டம் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உடனடி உதவி நிதியாக 10 கோடி ரூபாய் வழங்கிட முடிவெடுக்கப்பட்டது.
இந்த தகவலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 14 லாரிகளில் உணவு மற்றும் உடைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தகவலை பினராயி விஜயன் ட்விட்டரில், தமிழ் மொழியில் பதிவிட்டிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ட்விட்டரில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.