காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ரேணுகா சௌத்ரியை பிரதமர் மோடி தரக்குறைவாக பேசியதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
பட்ஜெட் மீதான குடியரசு தலைவர் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது, “கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனித்துவமிக்க அடையாள அட்டை (ஆதார்) வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தார். ஆனால், கடந்த காங்கிரஸ் அரசு தாங்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்ததாக கூறி பெருமை கொள்கிறது”, என கூறினார்.
அப்போது, காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி அவையில் சத்தமாக சிரித்தார். அதற்கு, மாநிலங்களவை சபாநாயகர் ரேணுகா சௌத்ரியை நோக்கி, “உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்”, என கூறினார்.
அப்போது, பிரதமர் மோடி, “சபாநாயகரே ரேணுகா சௌத்ரியை எதுவும் கூறாதீர்கள். தொலைக்காட்சியில் ராமாயணம் தொடருக்கு பிறகு இத்தகைய சிரிப்பை இப்போதுதான் கேட்க முடிகிறது”, என கூறினார்.
ராமாயணம் தொடரில் எதிர்மறையான கதாபாத்திரம்தான் அப்படி சத்தமாக சிரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரேணுகா சௌத்ரி குறித்த காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ரேணுகா சௌத்ரி குறித்த பிரதமர் மோடியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மாநிலங்களவை சபாநாயகர் வெங்கைய நாயுடு பாகுபாடுடன் செயல்படக்கூடாது எனவும், நாடாளுமன்றத்தின் சக உறுப்பினரை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.