தெலுங்கானாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 2024-25 நிதியாண்டிலிருந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தை செயல்படுத்த விருப்பம் காட்டியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த முதன்மையான கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1.57 லட்சம் வீடுகள் கட்டப்படுவதற்காக அனுமதி கோரியுள்ளது.
இது குறித்து தெலுங்கானா மாநிலத்தின் போக்குவரத்து, சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையின் முதன்மை செயலர், கடந்த மார்ச் 16 அன்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெலுங்கானா அரசு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தற்போதைய தெலுங்கானா அரசின் நிலைப்பாடு முந்தைய பி.ஆர்.எஸ் அரசன் நிலைப்பாட்டிற்கு மாறாக உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க : Congress govt in Telangana shuns BRS stand, wants to join PMAY-G
கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டம் தெலுங்கானால் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்தில் சேர வேண்டாம் என்றும் முந்தைய தெலுங்கானா அரசு கூறியிருந்தது. மேலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டில், 76,000 வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்குடன் தெலுங்கானா அரசுக்கு மத்திய அரசு ரூ.190 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், இத்திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தவில்லை.
2016-17 காலக்கட்டத்தில் மாநில அரசு மையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற விரும்பவில்லை. இதனிடையே சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு (SECC) 2011 தரவுகளின்படி, தெலுங்கானா மாநிலத்தில் 2.86 லட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் இருப்பதாக, தற்போதைய காங்கிரஸ் அரசு மார்ச் 16ஆம் தேதியன்று எழுதிய கடிதத்தில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
"இது தொடர்பாக, மாநில அரசு பிராண்டிங் உட்பட அனைத்து விதங்களிலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்று சமர்ப்பிக்கப்படுகிறது" என்று மாநிலம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. "எனவே, மாநில அரசு முதன்மையான முன்னுரிமையில் இத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம், தெரிவித்துள்ளதால், மாநிலத்திற்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 1,57,500 வீடுகளை கட்ட விரைவில் அனுமதிக்க பரிசீலிக்குமாறு தெலுங்கானா அரசு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்கும் என்று தெரிகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மல் சீதாராமன் அறிவித்த 2 கோடி கூடுதல் பி.எம்.ஏ.ய் ஜி (PMAY-G) வீடுகளில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு நடப்பு நிதியாண்டில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் 25 லட்சம் வீடுகளை கட்டும் லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தை செயல்படுத்த தெலுங்கானா அரசு தயாராக உள்ளது. இந்த நிதியாண்டில் 4.5 லட்சம் வீடுகளை கட்ட திட்டமிட்டுள்ளது, அதில் 1.57 லட்சம் வீடுகள் கிராமப்புறங்களில் இருக்கும். மாநில அரசு இந்த வீடுகளை பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) பயனாளிகள் தலைமையிலான கட்டுமானத்தின் (BLC) கீழ் கட்ட ஆலோசித்து வருகிறது..
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு முதன்மையான மத்திய அரசின் திட்டமாகும், இது கிராமப்புறங்களில் வீடற்ற அல்லது கட்சா மற்றும் பாழடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் குறைந்தபட்சம் 25 சதுர மீட்டர் பரப்பளவில் சிறப்பான வீடுகளை கட்டித்தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் சமவெளிப் பகுதிகளில் ரூ.1.20 லட்சமும், மலைப்பாங்கான மாநிலங்கள், கடினமான நிலப்பரப்பு மற்றும் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் ரூ.1.30 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது. 2024 மார்ச் மாதத்திற்குள் 2.95 கோடி வீடுகளை கட்டும் இலக்குடன், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே முறையே 60:40 என்ற விகிதத்தில் நிதி பிரிக்கப்பட உள்ளது. 2.95 கோடி வீடுகள் என்ற கட்டாய இலக்குக்கு எதிராக, 2,94,78,374 வீடுகள் ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2.59 கோடி வீடுகளின் கட்டுமானப் பணிகளும் ஏப்ரல் 3, 2024 வரை முடிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“