நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டில் நிலவும் என, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேலும், இரு கட்சிகளும் 42 சதவீத வாக்குகளை பெறும் எனவும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ்.-ஏ.பி.பி. ஆகியவை இணைந்து நடத்திய இறுதிக்கட்ட கருத்துக் கணிப்பில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 91-99 இடங்களை பெறும் எனவும், அதேசமயம் காங்கிரஸ் கட்சி 78-86 இடங்களை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பாஜகவின் வாக்கு சதவீதம் இன்னும் 4 மாதங்களில் 16 சதவீதம் குறையும் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
மேலும், வட குஜராத், தென் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான ஆதரவு உள்ளது எனவும், பாஜகவுக்கு மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிர ஆகிய பகுதிகளில் ஆதரவு அதிகமாக உள்ளது எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், மத்திய குஜராத்தில் காங்கிரஸ் வெறும் 38 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் எனவும், பாஜக 54 சதவீத வாக்குகள் பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், வட குஜராத்தில் காங்கிரஸ் 49 சதவீத வாக்குகளையும், பாஜக 44 சதவீத வாக்குகளையும் பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மேலும், படேல் சமூகத்தினருக்காக போராடும் ஹர்திக் படேலின் புகழ் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து குறைந்து வருவதாகவும் அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. இது அக்டோபரில் 64 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக குறைந்துள்ளது.