Income-tax-raid | congress: ஒடிசாவில் 'பவுத் டிஸ்டிலெரி' எனப்படும் மதுபான ஆலை மற்றும் அதற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் (ஐ.டி) கடந்த வாரம் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., தீரஜ் சாஹு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.
மேலும், பல்டியோ சாஹு மற்றும் குரூப் ஆஃப் கம்பனிஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் தொடர்புடைய சுமார் 30 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 10 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை, 350 கோடி ரூபாய் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த அதிரடியான சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், "ஏஜென்சியால் ஒரே ஆபரேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்ச பணம் இதுவாகும். கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி 5 நாட்கள் நடைபெற்று ஞாயிற்றுக்கிழமை தான் முடிவடைந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பலங்கிர், சம்பல்பூர் மற்றும் திட்லாகர் ஆகிய மூன்று எஸ்.பி.ஐ வாங்கி கிளைகளுக்கு எண்ணுவதற்காக பைகளில் எடுத்துச் செல்லப்பட்டது. அதிகபட்சமாக 176 பைகள் நிரப்பப்பட்ட ரொக்கப் பணம் எஸ்.பி.ஐ-யின் பலங்கிர் கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நோட்டுகளை எண்ணுவதற்கு கூடுதல் ஆட்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது." என்று தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Not all money is mine…’: Congress MP Dhiraj Sahu at centre of I-T raids end post ‘highest-ever’ cash haul
எம்.பி தீரஜ் சாஹு பேச்சு
இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலைக்கு எதிரான வருமான வரித் துறையின் சோதனை நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முடிவடைந்த நிலையில், வருமான வரித்துறை முக்கிய குற்றவாளியாக முன்னிறுத்தும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி தீரஜ் சாஹு, இந்த பணத்திற்கும் காங்கிரஸ் அல்லது வேறு எந்த அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் அவருக்கு சொந்தமானது அல்ல. ஆனால் அவரது குடும்பம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.பி தீரஜ் சாஹு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துடன் பேசுகையில், "இன்று நடப்பவை எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. மீட்கப்பட்ட பணம் எனது நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியும். மீட்கப்பட்ட பணம் எனது மதுபான நிறுவனங்களுடன் தொடர்புடையது. அது மதுபான விற்பனையில் வந்தது. அவை எல்லாவற்றுக்கும் என்னால் கணக்கு கொடுக்க முடியும்.
இந்தப் பணத்துக்கும் காங்கிரஸுக்கும் வேறு எந்த அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சி சொல்வது போல். எல்லா பணமும் என்னுடையது அல்ல. அது எனது குடும்பம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சொந்தமானது. அதைத்தான் ஐ.டி இப்போது ரெய்டு செய்துள்ளது." என்று கூறினார்.
வருமான வரித் துறையின் சோதனையில் கைப்பற்ற பணம் "கறுப்புப் பணம்" என்கிற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, "இது 'கருப்புப் பணமா அல்லது வெள்ளைப் பணமா' என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“