தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று (மார்ச் 7) பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
மேகாலயாவில் உள்ள மொத்தம் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தேசிய மக்கள் கட்சிக்கு பா.ஜ.க உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவு அளித்தன. அதன்படி பாஜகவின் 2 எம்எம்ஏக்கள் உள்பட 45 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. தேசிய மக்கள் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு ஆட்சி அமைக்க கோரப்பட்டது.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வர் கான்ராட் சங்மா உடன் பாஜகவின் அலெக்சாண்டர் லாலூ ஹெக் உட்பட 12 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மேகாலயா மற்றும் நாகாலாந்து முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை குவாஹாட்டியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா பிரதமரை வரவேற்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஷில்லாங் சென்ற அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வரவேற்றனர். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து பதவியேற்பு முடிந்தபின் அங்கிருந்து பிரதமர் மோடி நாகாலாந்து செல்கிறார். நாகாலாந்தில் என்.டி.பி.பி- பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. என்.டி.பி.பி கட்சி தலைவர் நெய்பியு ரியோ முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நாகாலாந்தில் என்.டி.பி.பி- பா.ஜ.க கூட்டணி மொத்தம் 60 இடங்களில் 37 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
மாலையில் குவாஹாட்டி திரும்பும் மோடி, அசாம் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை (புதன்கிழமை) திரிபுராவின் அகர்தலா செல்கிறார். திரிபுராவில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியைச் சேர்ந்த மாணிக் சாஹா முதல்வராக பதவியேற்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/