கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, படுகொலை செய்த சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி, கொல்கத்தாவில் மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மருத்துவமனையில் கருத்தரங்கம் நடைபெறும் அரங்கில் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: RG Kar Doctor Case Verdict Live Updates: Convict Sanjoy Roy sentenced to life imprisonment for rape and murder of doctor
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு வந்தது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, காவல் துறையினரிடமிருந்து சி.பி.ஐ-க்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. மேலும், சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது. அதன்படி, கடந்த 18-ஆம் தேதி, சஞ்சய் ராயை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் மீது 45 பக்கங்களில் சார்ஜ் ஷீட் பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில், சஞ்சய் ராய் தான் குற்றத்தை செய்தார் என்பதற்கான 11 ஆதாரங்கள் புலப்படுவதாக கூறிய நீதிமன்றம், அவரை குற்றவாளி என அறிவித்தது. மேலும், சஞ்சய் ராய்க்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம் (ஜன 20) சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்களை சியல்டா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அபராதமாக ரூ. 50 ஆயிரத்தை சஞ்சய் ராய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.