இன்று அதிகாலை மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் குறைந்தது 16 புலம்பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறிய சம்பவம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் மரணமடைந்தனர். தங்கள் சொந்த மாநிலமான மத்திய பிரேதேசத்திற்கு செல்லும் ஷர்மிக் சிறப்பு ரயிலை பிடிப்பதற்காக ஜல்னா நகரில் இருந்து பூசாவ நகருக்கு நடந்து கொண்டிருக்கையில், ஓய்வு எடுப்பதற்காக ரயில் தடங்களில் தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “அவுரங்காபாத்தில் ரயில் விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசியுள்ளேன். அவர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. " என்று தெரிவித்தார்.
தொழிலாளர்கள் ஜல்னா நகரில் இருந்து பூசாவல் நகருக்கு நடந்து கொண்டிருந்தபோது சோர்வு காரணமாக ரயில்வே தடங்களில் உறங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில் ஓட்டுநர் நிறுத்த முயன்றார், இருப்பினும் அதை அவரால் செய்ய முடியவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சோர்வு காரணமாக இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தடங்களில் தூங்கியிருக்க வேண்டும் என்று அவுரங்காபாத் கிராமப்புற காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் கெத்மல் தெரிவித்தார்.
ஜல்னாவிலிருந்து நடையைத் தொடங்கிய இந்த 20 தொழிலாளர்களும் பூசாவல் வரை நடக்திருந்தனர். இது 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார், 45 கிலோமீட்டர் தூரம் நடந்தபின்,ஓய்வெடுப்பதற்காக ரயில்வே தடங்களில் உறங்கியுள்ளனர். அதிகாலை 5.15 மணியளவில் ஒரு சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது, ” என்று தெரிவித்தார்.
இறந்தவர்களின் இறுதி சடங்கினை ஏற்பாடு செய்வதற்காக ஒரு சிறப்பு விமானத்தில் அதிகாரிகள் குழுவை அவுரங்காபாத்திற்கு அனுப்ப மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ .5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த விபத்து சம்பவம் சுயாதீனமான விசாரணை வேண்டும் என்று மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜயா சிங் தெரிவித்துள்ளார். இந்த தொழிலாளர்களை மத்திய பிரதேச அரசு முறையாக பதிவு செய்துள்ளதா? சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கு மாநில அரசு சார்பில் ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
சில நபர்கள் ரயில்வே தடங்களில் இருப்பதைக் கவனித்த ரயில்வே ஓட்டுனர் எச்சரிக்கை ஒலியை எழுப்பி, ரயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும், வேகத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டார் என்று தென் மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சி.ரகேஷ் கூறினார். ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.