Covid 19 India 2nd wave Tamil News: பணி நிமித்தம் காரணமாக மீரட் நகருக்கு புலம் பெயர்ந்த கேரளவைச் சேர்ந்த கிரிகோரி ரேமண்ட் ரபேல் மற்றும் சோஜா தம்பதியினர், அங்குள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகன்களும், ஒரு மூத்த மகனும் உள்ளனர்.
மே 13 அன்று, பள்ளியில் தங்கள் பணியை தொடர்ந்திருந்த கிரிகோரி தாம்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட விஷயம் தூக்கி வாரி போட்டது. அவர்களின் இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொரு மகனான ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி தொற்று உறுதியாகி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு விரைந்த தம்பதியினர், மற்றொரு மகனான ரால்பிரட் அனுமதிக்கப்பட்டு இருந்த வார்டுக்கு சென்றனர். அப்போது “மா, நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள். ஏதோ நடந்துள்ளது, நீங்கள் என்னிடம் சொல்லவில்லை” என்று ரால்பிரட் தனது தாயிடம் கேட்டுள்ளார். பின்னர் சில நிமிடங்களிலேயே ரால்பிரட்டின் உயிரும் பிரிந்துள்ளது. மூன்று நிமிடங்கள் இடைவெளியில் பிறந்த அந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவின் கொடிய வீரியத்தால் 1 மணி நேர இடைவெளி உயிரிழந்தனர். இந்த சம்பவம் மீரட் நகரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து பேசிய இரட்டையர்களின் தந்தை கிரிகோரி ரேமண்ட் ரபேல் கூறுகையில், “இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் உடைந்துவிட்டது. அந்த இரு சகோதரர்களும் இதுவரை யாருக்கும் ஒரு தீங்கு கூட நினைத்ததில்லை.
ஏப்ரல் 23 அன்று இருவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இது பல நாட்கள் நீடித்தது. எனவே அவர்கள் மருந்து எடுத்துக் கொண்டனர். ஆனாலும் அவர்களின் நிலை மோசமடைந்தது. மே 1 ஆம் தேதி, இருவரும் ஆக்ஸிஜன் செறிவு அளவைக் குறைக்கத் தொடங்கிய பின்னர், மீரட்டில் உள்ள ஆனந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இறுதியில் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.
ஆனால், மே 10 அன்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் இருவருக்கும் நெகடிவ் என்று கூறப்பட்டது. இதனால் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, எங்கள் உலகம் நொறுங்கியது" என்று கூறினார்.
இந்த இரட்டை சகோதர்களும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர் (பி டெக்). மேலும் அவர்களின் இறுதி ஆண்டில், வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். (ஜோஃப்ரெட், அக்ஸென்ச்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும், ரால்பிரட் ஹூண்டாய் முபிஸ் நிறுவனத்திலும்)
ஜோஃப்ரெட் கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணிபுரிந்திருக்கிறார். அதே நேரத்தில் ரால்பிரெட் தனது ஹைதராபாத் அலுவலகத்தில் இருந்து கை காயம் காரணமாக விடுப்பில் வந்திருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)