நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தனது காரை ஒருவர் மாட்டுச்சாண கோட்டிங் கொடுத்து வெயிலில் இருந்து பாதுகாத்து வரும் போட்டோவுடன் கூடிய பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் ருபேஷ் கவுரங்க தாஸ். இவர் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், மாட்டுச்சாணத்தின் இதுபோன்ற சிறந்த உபேயாகத்தை இதுவரை நான் கண்டதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் உள்ள போட்டோவில், வெயிலில் இருந்து பாதுகாக்க, சேடான் கார் முழுவதும் மாட்டுச்சாணத்தால் பூசி மொழுகியுள்ளார். 45 டிகிரி செல்சியஸ் அளவிலான வெயிலில் இருந்தும், இந்த சாண கோட்டிங், காரை பாதுகாக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த காரின் பதிவு எண்ணை கொண்டு சேகரிக்கப்பட்ட விபரத்தின்படி, அந்த கார், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராம்நிக்லால் ஷா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இந்த பேஸ்புக் பதிவை பார்த்த பலர், இது எந்தளவிற்கு உபயோகமானதாக இருக்கும். எவ்வளவு மாட்டுச்சாணம் பயன்படுத்தப்பட்டது. மாட்டுச்சாணத்தின் வாசனை, நம்மளை ஒன்றும் பாதிக்காதா என்றவாறு விவாதம் செய்துவருகின்றனர்.
கிராமப்புறங்களில், வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து சாணம் பூசி மொழுகுவர். இது தரையை இயற்கை முறையில் சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாது, கோடை காலங்களில் குளிர்ச்சியாகவும், மழை காலங்களில் கதகதப்பாகவும் இருக்க உதவும். மாட்டுச்சாணம், கொசு விரட்டியாகவும், இயற்கை பூச்சி ஒழிப்பானாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாட்டின் சிறுநீர் (கோமியம்) மற்றும் சாணத்தின் மகிமை குறித்து பல்வேறு தலைவர்கள் பல தருணங்களில் எடுத்துரைத்துள்ளனர். கோமியத்தை மூலப்பொருளாக கொண்டு தரையை சுத்தப்படுத்தும் பொருட்களும் சந்தைகளில் வெளிவந்துள்ளன. மொபைல் போன்களில் கதிரியக்கத்தை குறைக்கவும் மாட்டுச்சாணம் பயன்படுவதாக கருத்து நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.