கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணின் மகன் பினோய். இவர், மதுபான பாரில் நடனமாடும் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி பாலியல் உறவு வைத்து, குழந்தையும் உண்டாக்கியதாக அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் அளித்த புகார் ஆதாரமற்றது என்று பினோய் பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
இது குறித்து பினோய் கூறுகையில், "கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்தப் பெண் எனக்கு ஒரு கடிதம் எழுதி, ரூ.5 கோடி கேட்டும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கூறியும் மிரட்டினார். ஆனால், எனக்கு 2008-ம் ஆண்டு திருமணம் நடந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் பினோய் பாலகிருஷ்ணன் மீது ஐபிசி பிரிவு 420, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண் டான்ஸர் அளித்த புகாரில், "துபாயில் ஒரு டான்ஸ் பாரில் நடனமாடிவந்த என்னைச் சந்தித்த பினோய் என்னிடம் நெருங்கிப் பழகினார். என்னை டான்ஸ் ஆடும் பணியை நிறுத்திவிடுமாறு கூறியதால், அவரின் பேச்சைக் கேட்டு வேலையை விட்டு மும்பை அந்தேரி பகுதியில் ஒரு வீடு எடுத்துத் தங்கினோம்.
அங்கு அடிக்கடி வந்த பினோய்க்கும் எனக்கும் உடல்ரீதியான உறவு ஏற்பட்டது. அதன் மூலம் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அதன்பின் கடந்த ஆண்டுதான் பினோய்க்கு திருமணம் நடந்துவிட்ட விவரம் தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பினோய் துபாயில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.