குற்றவழக்கில் தண்டணை பெற்று தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த ஒருவர் ஒரு கட்சியை தொடங்கவோ, நிர்வகிக்கவோ முடியுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக சேர்ந்தவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா என்பவர் குற்றவாளிகள் கட்சியை நடத்த தடைவிதிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக,
1. குற்றவாளி அல்லது ஊழல்வாதி ஒருவர் எப்படி ஒரு கட்சியை நடத்த முடியும்?
2.அவ்வாறு நடத்தப்பட்டால் அது தூய்மையாக நடைபெறும் தேர்தல் நடைமுறைகளுக்கு இழுக்கு சேர்ப்பதாய் அமையாதா?
3. குற்றவாளிகள் ஒரு கட்சியை நடத்தி, தேர்தலுக்காக ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயகத்தின் மிக மோசமான வாய்ப்பாக அமையாதா?
04. இது போன்று இருப்பது உச்சநீதிமன்றம் பல தருணங்களில் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானதாக இருக்காதா?
இது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என கூறிய நீதிமன்றம், இது குறித்து 2 வாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கிற்கு கூடுதல் பலம் சேர்ப்பது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வாதங்கள் தான். தவறு செய்யும் கட்சிகளை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேவைப்படுகிறது என தேர்தல் ஆணையம் வைக்கும் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.