வங்கக்கடலில் உருவானது ‘அசானி’ புயல்… தமிழகத்திற்கு பாதிப்பு உண்டா?
Asani Cyclone update: அசானி புயல் திங்கள்கிழமை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். காற்று மணிக்கு 118 முதல் 220 கி.மீ வரை வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Asani Cyclone 2022 update: வங்கக் கடலில் தென்கிழக்கு பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. இது 2022 இல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான முதல் புயல் ஆகும்.
Advertisment
திங்கள்கிழமை காலைக்குள் அசானி புயல் மேலும் இரண்டு கட்டங்கள் தீவிரமடைந்து மிகக் கடுமையான புயலாக கிழக்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நீடிக்கும் என தெரிகிறது. அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 118 முதல் 220 கி.மீ வரை வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
IMD வெளியிட்ட புயல் நகர்வு தடத்தின்படி, அசானி புயல் செவ்வாய்க்கிழமைக்குள் ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா கடற்கரையை நெருங்கும். ஆனால் கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனவும், அடுத்த இரண்டு நாட்களில் மாநிலங்களின் கடலோர மாவட்டங்கள் வழியாக பயணிக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
அசானி புயல் கடலில் தீவிர புயலாக வலுவடைவதை காண முடிகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு வேகமாக மூன்று கட்டங்களை தாண்டியுள்ளது. முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து இரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும் மாறியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி வரை IMD கண்காணித்ததில், கடந்த ஆறு மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் அசானி புயல் நகர்ந்தது. அந்தமான நிகோபாருக்கு வடமேற்கில் 450 கிமீ தொலைவிலும், போர்ட் பிளேயருக்கு மேற்கே 380 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவிலும், ஒடிசாவில் உள்ள பூரிக்கு தென்-தென்கிழக்கே 1,030 கிமீ தொலைவிலும் சமீபத்திய இருப்பிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசானி புயல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை அடைய வாய்ப்பியிருப்பதாக கருதப்படுகிறது. அதன்பிறகு, வடக்கு-கிழக்கு திசையில் திரும்பி, ஒடிசா கடற்கரையை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை எச்சரிக்கை
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் நகரும் திசையை கணக்கிட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஓடிசாவில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மே 12-ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் கடல் சீற்றத்தை கருத்தில் கொண்டு, அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தமான் கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மழை உண்டா?
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை 9 ஆம்தேதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil