/indian-express-tamil/media/media_files/2024/12/01/Fd9J9RqbHmrlVujKzz1w.jpg)
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கரையோர பகுதிகளை தாக்கிய ஃபீஞ்சல் புயல், புதுச்சேரியில் 460 மி.மீ. மழையை ஏற்படுத்தியுள்ளது. இது புதுச்சேரியில் பதிவான அதிகபட்ச மழை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Hours after landfall, Cyclone Fengal continues to maintain intensity, says IMD
இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி 210 மி.மீ மழை புதுச்சேரியில் பதிவாகியிருந்ததே அதிகபட்ச மழை எனவும், சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், வட தமிழகத்தின் விழுப்புரத்தில் 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததாகவும், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலைகள் பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
“ஃபீஞ்சல் அதன் மெதுவான இயக்கத்தின் காரணமாக, வட தமிழகம், புதுச்சேரியின் சில மாவட்டங்களில் இத்தகைய கனமழையை ஏற்படுத்தியுள்ளது. ஃபீஞ்சல் புயல் கரையைக் கடந்து 9 மணி நேரம் ஆகிவிட்ட போதிலும், அது தனது தீவிரத் தன்மையை இழக்காமல் உள்ளது” என அதிகாரிகள் கூறுகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஃபீஞ்சல் புயல் இயக்கம் கரையைக் கடந்த பிறகும் மெதுவாக உள்ளதாக கூறப்படுகிறது.
“ஃபீஞ்சல் புயல் கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 7 கி.மீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்தது. இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் நள்ளிரவு 1 மணி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. எனினும், பல விமானங்கள் தாமதமாக செயல்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.