Advertisment

மோடியின் பாராட்டுக்கு மறுநாள், மனோகர் லால் கட்டார் பதவி விலகல்: ஹரியானா முதல்வரை பா.ஜ.க மாற்றியது ஏன்?

'இரண்டு முறை முதல்வராக இருந்தவர்களை மாற்ற வேண்டும்' என்ற கட்சியின் கொள்கையின்படி ஹரியானா முதல்வர் மாற்றம்; மனோகர் லால் கட்டாரை மக்களவை தேர்தலில் களமிறக்கவும் திட்டம்; பா.ஜ.க வட்டாரங்கள் தகவல்

author-image
WebDesk
New Update
khattar and modi

ஹரியானா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் மனோகர் லால் கட்டார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Varinder Bhatia , Liz Mathew

Advertisment

ஹரியானாவில் பா.ஜ.க- ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) கூட்டணியில் பிளவு மற்றும் மனோகர் லால் கட்டார் அரசாங்கம் ராஜினாமா செய்வது குறித்த பேச்சுடன் நாள் தொடங்கியது. பிற்பகலில், கூட்டணி முடிவுக்கு வந்தது, மனோகர் லால் கட்டார் வெளியேறினார், மேலும் மாநில பா.ஜ.க தலைவரும், குருக்ஷேத்ரா எம்.பி.யுமான, நயாப் சைனி, புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். கட்சி உள்விவகாரங்களின்படி, பா.ஜ.க சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் மனோகர் லால் கட்டாரே நயாப் சைனியின் பெயரை முன்மொழிந்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: Day after praise from PM Modi, Manohar Lal Khattar out as Haryana CM: Why BJP replaced him

துவாரகா விரைவுச் சாலையின் ஹரியானா பகுதியை அரசாங்கம் தொடங்கும் போது குர்கானில் நடந்த நிகழ்வில் மனோகர் லால் கட்டாரையும், ஹரியானாவின் வளர்ச்சிக்கான அவரது பார்வையையும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய ஒரு நாள் கழித்து ஹரியானாவில் இந்த நிகழ்வுகள் வெளிப்பட்டன.

தானும் மனோகர் லால் கட்டாரும் நீண்ட தூரம் செல்வதை நினைவுகூர்ந்த மோடி, மனோகர் லால் கட்டாரின் மோட்டார் சைக்கிளில் பில்லியனில் அமர்ந்துச் சென்றதையும், அடிக்கடி ரோஹ்டக்கிலிருந்து குர்கானுக்குப் பயணித்ததையும் விவரித்தார். "சிறிய சாலைகள் இருந்தன, ஆனால் இன்று முழு குருகிராம் பகுதியும் பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட, இது முதலமைச்சர் ஸ்ரீ மனோகர் லாலின் முற்போக்கான மனநிலையை பிரதிபலிக்கிறது. இன்று, முதல்வர் தலைமையில் ஒவ்வொரு ஹரியான்வியின் எதிர்காலமும் பாதுகாப்பாக உள்ளது,” என்று மோடி கூறினார்.

ஹரியானாவின் 2.82 கோடி மக்கள் சார்பாக, ஹரியானாவின் 10 மக்களவைத் தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெறும் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று மோடியிடம் மனோகர் லால் கட்டார் உறுதியளித்தார். ஜனவரி மாதம், நலத்திட்டப் பயனாளிகளுடன் தனது காணொளி உரையாடலின் போது, பிரதமர் மோடி, ரோஹ்டக்கைச் சேர்ந்த விவசாயி ஒருவருடன் பேசுகையில், மனோகர் லால் கட்டாரை "மிகவும் வலிமையான மனிதர்" என்று விவரித்து, அவர் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டங்களின் பலன்களை அனைவரும் பெறுவதை உறுதி செய்தார் என்று பாராட்டினார்.

லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர்களில் ஒருவராக மனோகர் லால் கட்டார் முன்னிறுத்தப்படலாம் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன. இரண்டு முறை முதல்வராக இருந்தவர்களை மாற்ற வேண்டும் என்ற கட்சியின் நிலைப்பாட்டின்படி அவரை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர் ஒருவர் தெரிவித்தார். “நாங்கள் தேர்தலுக்குச் செல்லும்போது தலைமைக்கு புத்துணர்ச்சியைக் கொண்டுவர கட்சி விரும்புகிறது. மனோகர் லால் கட்டார் ஒரு நல்ல அமைப்பாளர், நல்ல நிர்வாகி, தூய்மையான மனிதர். கட்சியில் அவர் மீது எந்த புகாரும் இல்லை, எனவே, இது எப்போதும் புதிய முகங்களைக் கொண்டு வருவதற்கும் மற்ற தலைவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்குமான பா.ஜ.க.,வின் முயற்சிகள்,” என்று ஹரியானாவில் கட்சியின் நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க உள்ள நிலையில், அதன் சட்டசபை தேர்தல் வாய்ப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானாவில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “ஹரியானாவில், லோக்சபா தேர்தல் பா.ஜ.க.,வுக்கு கடினமாக இருக்காது. மாநிலத்தில் உள்ள 36 குறிப்பிடத்தக்க சமூகங்களும் பிரதமர் மோடியை நேசிக்கின்றன, அவரை ஆதரிக்கின்றன,” என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார், அதேநேரம் விவசாயிகளின் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வாய்ப்பைப் பறிக்கக்கூடும் என்றும் அந்த தலைவர் கூறினார்.

மனோகர் லால் கட்டார் பதவிக்காலம்

மனோகர் லால் கட்டார் 2014 இல் ஹரியானாவில் உள்ள கர்னாலில் தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், மீண்டும் 2019 தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். 2014-ல் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 47 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையை பா.ஜ.க கைப்பற்றி வரலாறு படைத்தது.

அவருடைய முன்னோடிகளைப் போலல்லாமல், ஒன்பதரை ஆண்டுகளுக்கும் மேலான அவரது பதவிக் காலத்தில், மனோகர் லால் கட்டார் பல சவால்களை எதிர்கொண்டார், குறிப்பாக பல பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜாட் இடஒதுக்கீடு போராட்டம் நடந்தது, இதில் 30 க்கும் மேற்பட்டோர் இறந்தனர், 2017 ஆம் ஆண்டு பஞ்ச்குலாவில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தால் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் பேரில், தேரா சச்சா சவுதா தலைவர் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆயுதப்படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 2018 இல் மதத் தலைவர் ராம்பால் கைது செய்யப்பட்டதில் குறைந்தது ஆறு பேர் இறந்தனர், 2020-'21 விவசாயிகள் போராட்டம், கடந்த ஆண்டு நூவில் நடந்த வகுப்புவாத வன்முறை மற்றும் நடந்துகொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம். ஆனால் பா.ஜ.க தலைமையின் ஆதரவுடன் மனோகர் லால் கட்டார் வெற்றி பெற்றார்.

2019 ஆம் ஆண்டில், ஹரியானாவில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் மனோகர் லால் கட்டார் முக்கிய பங்கு வகித்தார், இது மாநிலத்தில் பா.ஜ.க முழுமையாக வெற்றிப் பெற உதவியது. 10 மக்களவைத் தொகுதிகளில் 8 இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் 3.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. மனோகர் லால் கட்டார் பல திட்டங்களையும் தொடங்கினார். பரிவார் பெஹ்சான் பத்ரா மற்றும் ஸ்வமித்வா (SVAMITVA) ஆகிய இரண்டு முதன்மைத் திட்டங்களும் மத்திய அரசால் பாராட்டப்பட்டன, இதில் SVAMITVAவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது, இது உள்ளூர் மொழியில் லால் டோரா என்று அழைக்கப்படும் மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு "உரிமைகளின் பதிவேடு" வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டம் 2021 இல் ஹரியானாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2021 ஆம் ஆண்டிலும் மனோகர் லால் கட்டாரைப் பாராட்டிய மோடி, “ஒரு முதலமைச்சராக அவரது திறமை முன்னுக்கு வந்துள்ளது, மேலும் அவர் அர்ப்பணிப்புடனும் புதுமையுடனும் பணியாற்றுகிறார், ஹரியானா அரசாங்கத்தின் சில திட்டங்களின் மாதிரியை மத்திய அரசு கூட ஏற்றுக்கொள்கிறது” என்று கூறினார். அந்த நேரத்தில், உத்தரகாண்டில் அடுத்தடுத்து இரண்டு முதல்வர்கள் மற்றும் குஜராத்தில் மற்றொருவர் என பா.ஜ.க மூன்று முதல்வர்களை மாற்றியதால் மனோகர் லால் கட்டார் மாற்றப்படலாம் என்று ஊகிக்கப்பட்டது.

ஜஜ்ஜரில் நடந்த நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “பல தசாப்தங்களுக்குப் பிறகு, மனோகர் லால் கட்டார் தலைமையில் ஹரியானாவில் முழுமையான நேர்மையுடன் செயல்படும் அரசு கிடைத்துள்ளது. மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றி இரவும் பகலும் சிந்திக்கும் அரசாங்கத்தை ஹரியானா பெற்றுள்ளது... ஊடகங்கள் இந்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான விஷயத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை, ஆனால் மதிப்பீடு செய்யப்படும் போதெல்லாம் இந்த அரசாங்கம் சிறந்ததாகக் கருதப்படும்,” என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pm Modi Haryana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment