குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. இக்கட்டுரை வெளியாகும் வரை குஜராத் மாநிலத்தில், பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 72 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக 42 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திரமோடிக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “அன்புக்குரிய பிரதமரே, இந்த வெற்றிக்கு வாழ்த்துகள். ஆனால், நீங்கள் உண்மையிலேயே இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறீர்களா?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ”150-க்கும் மேற்பட்ட இடங்களை ஏன் பெற முடியவில்லை?”, என தன் பதிவில் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் சிலவற்றை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள பிரகாஷ் ராஜ்,
1. பிரித்தாளும் அரசியல் பயன்படாது.
2. பாகிஸ்தான், மதம், சாதி, அச்சுறுத்தும் குழுக்களை ஆதரித்தல், ஆகியவற்றைவிட நம் நாட்டில் பல பிரச்சனைகள் நிலவுகின்றன.
3. விவசாயிகள், ஏழைகள், கிராமப்புறங்களில் உண்மையான பிரச்சனைகள் உள்ளன.
என தெரிவித்துள்ளார்.