Advertisment

சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்ற பா.ஜ.க; முன்மொழிபவர் என்பவர் யார்? அவரின் பங்கு என்ன?

முன்மொழிந்தவர் கையெழுத்தில் முரண்பாடு; சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி பா.ஜ.க வெற்றி; முன்மொழிபவர் என்பவர் யார்? வேட்புமனு தாக்கலில் அவரது பங்கு என்ன?

author-image
WebDesk
New Update
surat kumbani

சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Damini Nath

Advertisment

2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனது முதல் இடத்தைப் போட்டியின்றி வென்றது, காங்கிரஸ் கட்சியின் சூரத் தொகுதி வேட்பாளர் நிலேஷ் கும்பானி அவரது வேட்பு மனுக்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார், மேலும் எட்டு வேட்பாளர்கள் களத்தில் இருந்து விலகினர். ஒரு லோக்சபா தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெறுவது அரிது, பா.ஜ.க.,வுக்கு இதுவே முதல் வெற்றியாகும்.

ஆங்கிலத்தில் படிக்க: Decode Politics: As BJP’s unopposed Lok Sabha win in Surat hangs on it, what is the role of a proposer?

நிலேஷ் கும்பானி மற்றும் அவரின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலா ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு, "அவர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து சரிபார்ப்பில் உள்ள முரண்பாடுகள்" என்ற அடிப்படையில் காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது.

எனவே, முன்மொழிபவர்கள் யார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் (EC) விதிகள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களைப் பற்றி என்ன கூறுகின்றன?

முன்மொழிபவர் யார்?

தேர்தல் போட்டியில் ஒரு வேட்பாளருக்கு முன்மொழிபவர் இருக்க வேண்டும். தேர்தல் ஆணைய விதிகளின்படி, ஒரு வேட்பாளரின் வேட்புமனுவை முன்மொழிபவர், அந்த வேட்பாளர் போட்டியிடும் சட்டமன்ற அல்லது நாடாளுமன்றத் தொகுதியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். வேட்பாளரின் வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் எனக் கருதப்படுவதற்கு முன்மொழிபவர் மற்றும் வேட்பாளரால் கையொப்பமிடப்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் படி, அங்கீகரிக்கப்பட்ட மாநில அல்லது தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு ஒரு முன்மொழிபவர் தேவை, அதே சமயம் சுயேச்சை அல்லது அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளருக்கு 10 முன்மொழிபவர்கள் தேவை.

ஒரு வேட்பாளருக்கு ஒரே தொகுதியில் நான்கு வேட்புமனுக்கள் வரை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது, ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் பாதுகாப்பாக இருக்க இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

முன்மொழிபவரின் பங்கு என்ன?

ஒரு முன்மொழிபவர் ஒரு நியமனப் பத்திரத்தில் நியமிக்கப்பட்ட பகுதியில் கையொப்பமிட வேண்டும். அவர் ஒரே வேட்பாளருக்கும் வெவ்வேறு வேட்பாளர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்புமனுவில் கையெழுத்திடலாம்.

வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்கப்படும்போது வேட்பாளரும் முன்மொழிபவரும் கட்டாயமாக இருக்க வேண்டும். வேட்பாளர் மற்றும் முன்மொழிபவரின் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியல் எண் தேர்தல் ஆணைய பதிவுகளுடன் பொருந்தியிருப்பதை தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதிப்படுத்த வேண்டும்.

எந்த அடிப்படையில் வேட்பு மனுக்களை நிராகரிக்கலாம்?

வேட்புமனுக்கள் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டாலோ அல்லது வேட்பாளர் அல்லது முன்மொழிபவரைத் தவிர வேறு எவராலும் சமர்ப்பிக்கப்பட்டாலோ, தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு வேட்பு மனுவை நிராகரிக்க முடியும். ஆவணங்களில் உள்ள கையொப்பங்கள் உண்மையானவை அல்ல அல்லது பிரமாணப் பத்திரம் முழுமையடையவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் கருதினாலும் ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்படலாம்.

சூரத்தில் என்ன நடந்தது, அதன் பின்விளைவுகள்?

சூரத் மக்களவைத் தொகுதிக்கு நிலேஷ் கும்பானி மூன்று வேட்புமனுப் படிவங்களைத் தாக்கல் செய்தார், வெளிப்படையாகப் பாதுகாப்பாக இருக்க, ஒவ்வொரு வேட்பு மனுவுக்கும் ஒவ்வொரு முன்மொழிபவர் இருந்தார். அவர்கள் ஜகதீஷ் சவலியா (அவரது மைத்துனர்), துருவின் தமேலியா (அவரது மருமகன்) மற்றும் ரமேஷ் போல்ரா (அவரது வணிக பங்குதாரர்).

அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக களமிறங்க மாற்று வேட்பாளரையும் நிலேஷ் கும்பானி ஏற்பாடு செய்துள்ளார், அவர் கார்ப்பரேஷன் உறுப்பினராக இருந்தபோது அவரிடம் பணியாற்றிய வகையில் அறிமுகமான சுரேஷ் பத்சலா என்பவரை மாற்று வேட்பாளராக நிலேஷ் கும்பானி ஏற்பாடு செய்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. சுரேஷ் பத்சலாவின் வேட்பு மனுவை முன்மொழிந்த விஷால் கொலடியாவும் நிலேஷ் கும்பானியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்மொழிந்த நான்கு பேரின் கையெழுத்திலும் முரண்பாடு இருப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதுபோன்ற வேறு சம்பவங்கள் நடந்துள்ளதா?

இந்த மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவிலிருந்து சமாஜ்வாதி கட்சியின் (SP) வேட்பாளர் மீரா தீப்நாராயண் யாதவ், படிவத்தில் நியமிக்கப்பட்ட இடத்தில் கையெழுத்திடத் தவறியதாலும், பழைய வாக்காளர் பட்டியலை இணைத்ததாலும் நிராகரிக்கப்பட்டார். கஜுராஹோ தொகுதியை காங்கிரஸ் அவர்களின் இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு விட்டுக் கொடுத்தது. காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பார்வர்ட் பிளாக் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Congress Elections 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment