prasanth-kishore | n-chandrababu-naidu | andhra-pradesh | ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் உடன் பிரசாந்த் கிஷோர் விஜயவாடா ரயில் நிலையத்தில் நடத்திய சந்திப்பு அம்மாநில அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.
பிரசாந்த் கிஷோர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தற்போது ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர், சந்திரபாபு நாயுடு சந்திப்பு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சந்திரபாபு நாயுடுக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசனை?
கிஷோரின் முன்னாள் கூட்டாளிகளான ராபின் ஷர்மா மற்றும் சாந்தனு சிங் ஆகியோரால் நடத்தப்படும் ஷோடைம் கன்சல்டிங் என்ற நிறுவனம் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆலோசனை நடத்திவருகிறது.
2019 சட்டமன்ற மற்றும் லோக்சபா தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அப்போது, 175 சட்டமன்றத் தொகுதிகளில் 24 மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டை மட்டுமே அக்கட்சியால் கைப்பற்ற முடிந்தது.
இதற்கிடையில், லோகேஷின் "யுவ கலாம்" பாதயாத்திரை கிஷோரின் மூளையில் உருவானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒருவர் கிஷோரின் வருகை கட்சி செல்வாக்கை அதிகரிக்கும் என்றார்.
அப்போது, “அரசியல் ஆலோசனையில் அவரது பரந்த அனுபவம் உள்ளது” என்றார். 2019 தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பக்க பலமாக கிஷோர் நின்றார்.
ஆளுங்கட்சி எதிர்வினை
பிரசாந்த் கிஷோர் நாயுடு சந்திப்புக்கு ஆளுங்கட்சியினர் கடுமையான எதிர்வினை ஆற்றினார்கள். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஏ ராம்பாபு, “கட்டுமானப் பொருட்களே பழுதடைந்தால், கொத்தனார் என்ன செய்ய முடியும்?” என ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜோகி ரமேஷ், “இந்த மாநில மக்கள் ஏற்கனவே 2019ல் சந்திரபாபுவை அகற்றிவிட்டனர், மேலும் அவர்கள் தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனாவை வேரோடு பிடுங்குவதற்கு தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
கிஷோருக்கு ஏதாவது பலன் கிடைக்குமா?
தங்கள் கட்சித் தலைவருடன் கிஷோர் சந்தித்ததைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர்களில் ஒரு பகுதியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
லோகேஷ் பாதயாத்திரைக்குப் பிறகு அவர்கள் ஏற்கனவே உற்சாகமாக இருந்தனர், ஆனால் இப்போது ஆற்றல் இன்னும் அதிகமாக உள்ளது.
“இது நிச்சயமாக எங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கும்” என்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.
கிஷோர் ஐ-பேக் நிறுவனம் இடையே பிரிவா?
கிஷோருக்கும் அவரது முன்னாள் நிறுவனத்திற்கும் இடையே பல மாதங்களாக அதிருப்தி நிலவி வருகிறது. தற்போதைய நிர்வாகத்திற்கும் கிஷோருக்கும் இடையே வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
கிஷோர் தனது பிரச்சாரத்தில் இல்லாதது குறித்து ஜெகன் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 2021ஆம் ஆண்டு பிரசாந்த் கிஷோர் கடைசியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் வியூகங்கள் வகுத்து கொடுத்தார்.
பின்னர் அவர் ஓய்வு அறிவித்து பீகாரில் ஜன் சூராஜ் என்ற யாத்திரையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Decode Politics: Why Prashant Kishor met Chandrababu Naidu
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“