ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற தலைப்பில் தேசிய கட்டுரைப் போட்டியை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் 3 வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெறும் 78வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
"இளம் சிந்தனையாளர்களின் குரல்களை கேட்க பாதுகாப்பு அமைச்சகம் அழைக்கிறது! #OperationSindoor - இந்தியாவின் #பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையை மறுவரையறை செய்தல் என்ற தலைப்பில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் @mygovindia இணைந்து நடத்தும் இருமொழி கட்டுரைப் போட்டியில் பங்கேற்குமாறு" அமைச்சகம் X தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பதிவிட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்திய ஆயுதப் படைகள் மே 6, 7 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து "ஆபரேஷன் சிந்தூர்" நடத்தின. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய பீரங்கி தாக்குதல்களையும், ராணுவ நிலைகள், பொதுமக்களை குறிவைத்து தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. இவற்றில் பெரும்பாலானவை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டன. இஸ்லாமாபாத்தில் உள்ள நூர் கான் விமான தளம் உட்பட பாக்., விமான தளங்களையும் இந்தியா தாக்கியது. மே 10 அன்று இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவிக்கும் வரை இந்த விரோதப் போக்கு நீடித்தது.
மே 12 அன்று தனது உரையின்போது, பிரதமர் மோடி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் மறுவரையறுக்கப்பட்ட கோட்பாட்டை வெளிப்படுத்தும்போது ஒரு "புதிய சிவப்பு கோட்டை" வரைந்தார். பயங்கரவாதச் செயல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும், பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கும் இடையில் இந்தியா வேறுபாடு காட்டாது என்றும் அவர் கூறினார்.
தற்போது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போருக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதற்காக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலான 2 தூதுக் குழுக்கள் அடங்கிய 7 பல கட்சி தூதுக்குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது.