Advertisment

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண் கல்விக்கு தடை; டெல்லியில் போராடும் பள்ளி

டாரியில் இருபாலர் படிக்கும் வகுப்பறைகளில் பாலினப் பாகுபாடு இல்லாத பாடங்களுடன், ஆஃப்கன் அகதி குழந்தைகளுக்காக டெல்லியின் மையப்பகுதியில் ஆப்கானிஸ்தானின் அழகிய கல்வியை இந்த பள்ளி வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
Afghan school in delhi, taliban education ban for women, afghan school in Bhogal, afghani students in delhi, afghanistan, women education

டாரியில் இருபாலர் படிக்கும் வகுப்பறைகளில் பாலினப் பாகுபாடு இல்லாத பாடங்களுடன், ஆஃப்கன் அகதி குழந்தைகளுக்காக டெல்லியின் மையப்பகுதியில் ஆப்கானிஸ்தானின் அழகிய கல்வியை இந்த பள்ளி வழங்குகிறது.

Advertisment

“அன்பான பெண்களே, உங்களின் அடையாளம் உங்கள் திறமையால் வரையறுக்கப்படுகிறது” என்று ஒரு அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் கையால் எழுதிய வாசகங்களில் ஒன்று. “ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையான பூக்கள்… அவர்கள் ஒன்றாக சேர்ந்து இந்த உலகத்தை ஒரு அழகான தோட்டமாக மாற்றுகிறார்கள்…" என்று - ‘மூன்றாம் வகுப்பு ருஸ்தம் வாலிசாதா’ கையொப்பமிட்ட மற்றொரு பதிவு கூறுகிறது.

இந்தியாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகள் குழந்தைகளுக்கான ஒரே நிறுவனமான சையத் ஜமாலுதீன் ஆப்கான் உயர்நிலைப் பள்ளியில் மதியம் 1 மணிக்கு, குழந்தைகள் தலிபான்கள் ஆட்சிக்கு முந்தைய ஆப்கானிஸ்தானின் செங்குத்து மூவர்ணக் கொடியை ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள அதிபரின் அறையைத் தாண்டி, தங்கள் வகுப்பறைகளுக்குச் செல்லும்போது, மதிய உணவு இடைவேளை சத்தம் சீக்கிரமாகவே அடங்கிப் போகிறது.

publive-image

ஆண், பெண் என எந்தப் பிரிவினையும் இல்லாத வகுப்பறை (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

ஆப்கானிஸ்தானில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்கிழக்கு டெல்லியின் குடியிருப்பு பகுதியான போகலில் உள்ள மஸ்ஜித் லேனில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களின் இடைநிலை மற்றும் உயர்கல்வியை ஆளும் தலிபான்கள் தடை செய்துள்ள நிலையில், இந்த பள்ளி ஆப்கானிய குழந்தைகளுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு ஒரு அரிய பாதுகாப்பான இடமாகும்.

ஆகஸ்ட் 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நிதி பற்றாக்குறையால், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 278 மாணவர்களைக் கொண்ட பள்ளி, டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தை உதவிக்காக அணுகுவதற்கு முன்பு மூடப்படும் நிலையில் இருந்தது.

publive-image

காபூலில் உள்ள இந்திய தூதரகம் தலிபான்களுடன் செயல்பட்டாலும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

காபூலில் உள்ள இந்திய தூதரகம் தலிபான்களுடன் செயல்பட்டாலும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் உள்ள ஆஃப்கானிதான் தூதரகம் உட்பட ஆப்கானிஸ்தானின் ராஜதந்திர பணிகள் தலிபான் ஆட்சியில் சுதந்திரமாக செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தின் முதல் செயலாளரும் பள்ளி வாரிய உறுப்பினருமான சையத் ஜியாவுல்லா ஹஷிமி கூறுகயீல், “ஆகஸ்ட் 15, 2021 அன்று ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பள்ளி பல சிரமங்களை எதிர்கொண்டது. எங்களிடம் வாடகை செலுத்த பணம் இல்லாததால், எங்கள் இடத்தை காலி செய்ய வேண்டிய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியவில்லை. இதனால், பள்ளியை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதுதான் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தது. அவர்களுக்கு நன்றி, நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு கல்வியை தொடர்ந்து வழங்க முடிகிறது” என்று கூறினார்.

publive-image

இந்தியாவில் உள்ள அதன் தூதரகம் உட்பட ஆப்கானிஸ்தானின் இராஜதந்திர பணிகள் தலிபான் ஆட்சியில் இருந்து சுதந்திரமாக செயல்படுகின்றன. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

வெளியுறவு அமைச்சகமும் பள்ளி அதிகாரிகளும் நிதி உதவி விவரங்களை வெளியிட மறுத்தாலும், இந்த பள்ளி 5.5 லட்சம் மாத பட்ஜெட்டில் இயங்குவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளின் குழந்தைகளுக்கான கல்வி மையமாக 1994-ல் உலக அமைதிக்கான மகளிர் கூட்டமைப்பால் இந்தப் பள்ளி அமைக்கப்பட்டது. இது 2008-ல் ஒரு ஆரம்பப் பள்ளியாகவும், 2017-ல் உயர்நிலைப் பள்ளியாகவும் வளர்ந்தது. அப்போதுதான் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கம், இந்தியாவில் உள்ள அகதிகளின் கோரிக்கையின் பேரில், பள்ளிக்கு நிதியுதவி செய்யத் தொடங்கியது.

publive-image

ஆஃப்கானிஸ்தான் கொடியுடன் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தானின் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி கற்பதற்கு இந்தியாவிடமிருந்து பெற்ற ஆதரவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். “பள்ளி இன்னும் இயங்கிக் கொண்டிருப்பது தலிபான்களுக்கு உறுதியாகவும் தெளிவாகவும் இரண்டு செய்திகளை தெரிவித்துள்ளது. ஒன்று, ஆப்கானிஸ்தான் சிறுமிகளின் கல்வியை எதுவும் தடுக்க முடியாது. இரண்டு, இந்தக் கடினமான காலங்களில் இந்தியா எங்களைத் தனியாக விட்டுவிடவில்லை. எங்கள் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்து உண்மையான நண்பனாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் மூன்று முறை பள்ளி வளாகத்தை மாற்ற வேண்டியிருந்தது. ஆனால், அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாங்கள் கைவிடப்படவில்லை.” என்று கூறினார்.

publive-image

பள்ளியில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

அக்டோபர் 2021-ல், கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், பள்ளி போகலில் உள்ள அதன் வளாகத்தை காலி செய்து, ஒரு சிறிய அடுக்குமாடிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்பட்டன.

“நாங்கள் பள்ளிக்கு பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிக்க அல்லது சில வகுப்பறைகளை வாடகைக்கு எடுக்க முயற்சி செய்தோம். ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் வளாகத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியாக, ஆகஸ்ட் 2022-ல், போகலில் 6 வகுப்பறைகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தைக் கண்டுபிடித்தோம். அறைகள் பற்றாக்குறை காரணமாக, நாங்கள் 2 சுழற்சி முறையில் கட்டிடத்தைப் பயன்படுத்துகிறோம்” என்று மாமுண்ட்சாய் கூறினார்.

publive-image

ஜோஹ்ரா அஜிஜி (16) தலிபான்கள் சண்டையில் தந்தையை இழந்தவர், தனது தாயுடன் இந்தியாவிற்கு வந்தவர் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்

இத்தனை சவால்கள் இருந்தாலும், பள்ளி உற்சாகம் அடைவதற்கு காரணங்கள் இருக்கின்றன என்று பெருமையுடன் கூறுகிறார் பள்ளியின் முதல் செயலாளர் ஹாஷிமி. ஒன்று, தலிபான்களின் தடை இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் பெண்களை மட்டுமே படிக்கத் தூண்டியது - 278 மாணவர்களில், ஆண்களை (135) விட பெண்கள் (143) அதிகமாக உள்ளனர் . “மேலும், 2022-ல் பட்டம் பெற்ற எங்கள் மாணவர்களில் 17 பேர் டெல்லி பல்கலைக்கழகத்தில் 13 பேர் உட்பட பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களில் 7 பேர் பெண்கள். எங்களின் 35 ஆசிரியர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்” என்று ஹஷிமி கூறி சுவர்களில் சாதனையாளர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள வராண்டாவில் நடந்து செல்கிறார்.

டாரியில் கற்பிக்கப்படும் பாடங்கள் மற்றும் பாலின வேறுபாடு இல்லாத இருபாலர் வகுப்பறைகளுடன், டெல்லியின் மையத்தில் ஆப்கானிஸ்தானின் அழகான பள்ளியை வழங்குகிறது. ஆங்கிலம், பாஷ்டோ மற்றும் பிற அறிவியல் மற்றும் மனிதநேயப் பாடங்களைத் தவிர, இந்த பள்ளியில் இசை, கவிதை, கலை மற்றும் கைவினைப் பாடங்களை கற்பிப்பதோடு, அகிம்சை மற்றும் காந்திய ஆய்வுகளில் ஒரு பாடத்தை வழங்குகிறது. இந்த பள்ளி முன்பு ஆப்கானிஸ்தான் பள்ளிக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், தலிபான்கள் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்கள் டெல்லியில் உள்ள தூதரகத்தால் முத்திரையிட்டு வழங்கப்படுகின்றன.

publive-image

பள்ளியின் வராண்டாவில் ஆப்கானிஸ்தான் தேசிய வீராங்கனைகள் மற்றும் தத்துவவாதிகளின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

ஆப்கானிஸ்தானில் இருந்து அடுத்தடுத்த போர் அலைகளில் ஓடிய பெற்றோர்கள், சிலருக்கு சமீபத்தில் 2021-ம் ஆண்டு வரை, ஆப்கானிஸ்தான் கையகப்படுத்தப்படுவதற்கு முந்தைய நாட்களில் - மாணவர்களுக்கு - அவர்களின் வீடு மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றிய நினைவுகள் அடக்குமுறையின் கதைகளால் நிறைந்துள்ளன.

பன்ஜ்ஷிர் மாகாணத்தைச் சேர்ந்த ஜோஹ்ரா அஜிஜி (16), 2021-ல் தனது தாயுடன் டெல்லிக்கு வந்தவர். அதே நேரத்தில், அவரது தந்தை தலிபான்களுடன் சண்டையிடத் திரும்பினார். “அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. தலிபான்கள் வெற்றி பெற்ற பிறகு, யாரோ ஒருவர் அவரை தியாகி என்று ஃபேஸ்புக்கில் அவரது புகைப்படத்தை வெளியிட்டார். அதனால், அவர் இறந்துவிட்டார் என்று எங்களுக்குத் தெரிந்தது” என்று ஜோஹ்ரா கண்ணீர் விட்டார். “ஆப்கானிஸ்தானில் 3-ம் வகுப்பில் படிக்கும் எனது 8 வயது உறவுப் பெண் தனது ரேங்க் கார்டு எடுக்க பள்ளிக்குச் சென்றபோது, தாலிபான்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறியதாக என்னிடம் கூறினார். இவையனைத்தும் படிக்க வேண்டும் என்ற எனது தீர்மானத்தை வலுப்படுத்தியது. இந்தப் பள்ளியும், நாங்கள் இங்குக் கற்கும் கல்வியும் எனக்கு எல்லாமே முக்கியம்” என்று டாரியில் படிக்கும் ஜோஹ்ரா கூறுகிறார்.

publive-image

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் போன்ற நாட்களை பள்ளி மாணவர்கள் உணர்த்துவதற்காக கடைப்பிடிக்கிறது. (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

17 வயது நிலாப், தனது சகோதரர் கடத்தப்பட்டு 45 நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறுகிறார். பின்னர், 2017- ல் டெல்லிக்கு நகர்ந்தார். “நான் 2-ம் வகுப்பு படிக்கும் போது, கஜினியில் உள்ள எங்கள் பள்ளி தாலிபான்களால் குண்டுவீசித் தாக்கப்பட்டது.” என்று கூறினார்.

“பள்ளி உள்ளே கையெறி குண்டுகள் வீசப்பட்டன… அந்தக் காட்சி இன்னும் என்னை உலுக்குகிறது. அங்கிருந்து வரும் செய்திகள் எல்லாம் யாரும் திரும்பிப் போக விரும்பாத அளவுக்கு வருத்தமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் நாங்கள் இங்கு செய்வது போல் பிறந்தநாளைக் கொண்டாடவோ, திரைப்படங்களைப் பார்க்கவோ அல்லது பாடல்களைக் கேட்கவோ முடியாது. இதையெல்லாம் அவர்கள் ஏன் இழக்கிறார்கள்” என்று நிலாப் கேட்கிறார்.

பெண்கள் சிறுவர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். “ஆப்கானிஸ்தானில், பெண்கள் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள், அவர்களால் படிக்க முடியாது. அவர்களுக்காக நான் எவ்வளவு வருத்தப்படுகிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. அவர்கள் ஏன் சிறுமிகளிடம் இப்படிச் செய்கிறார்கள்” என்று 16 வயது அகமது கேள்வி எழுப்புகிறார்.

பள்ளியில் தாரி கற்பிக்கும் நோக்ஸ்டின் அஷ்ரஃபி (32), கூறுகிறார், “ஒரு பெண் படித்துவிட்டால் அந்த தலைமுறையை ஒடுக்க முடியாது என்பதை அறிந்த தலிபான்கள் எங்கள் பெண்களுக்கு இதைச் செய்கிறார்கள். இந்தப் பள்ளிதான் அகதிக் குழந்தைகளுக்கு எங்கள் ஒரே நம்பிக்கைக் கீற்று” என்று கூறினார்.

பள்ளி முதல்வர் கனிஷ்கா ஷஹாபி கூறுகையில், “எல்லாவற்றையும் மீறி, நாளைய எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையை இன்றைய நம்பிக்கையால மறுக்கப்பட்ட கற்றல் சூழலை உருவாக்க முயற்சி செய்தோம். இந்தியா தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம். விரைவில் நிரந்தர பள்ளி கட்டிடம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசுகையில், மகாத்மா காந்தி மற்றும் அப்துல் கஃபர் கான் ஆகியோரின் பெயரில் ‘காந்தி-பாட்ஷா கான் கல்விச் சங்கம்’ ஒன்றை அமைத்துள்ளதாகவும், அதை விரைவில் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஹஷிமி கூறுகிறார். “ஆப்கானிய தூதரகங்கள் செயல்படும் பிற நாடுகளில் இதை ஒரு மாதிரிப் பள்ளியாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களிடம் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன: நிரந்தர கட்டிடத்தை கண்டுபிடித்து சி.பி.எஸ்.இ-ல் பதிவு செய்வதுதான் எங்களின் முதன்மையான முன்னுரிமை” என்று ஹஷிமி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Delhi Afghanistan Taliban
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment