நீட் முதுநிலை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் புதன்கிழமை முதல் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரித்துள்ளனர்.
அந்த கடித்ததில், "நீட்-பிஜி கவுன்சிலிங் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதனை விரைவாக நடத்திட வைத்திருக்கும் திட்டங்கள் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டிய நேரம் இது. 24 மணி நேரத்தில் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்காவிட்டால் அவசர சிகிச்சை தவிர பிற சிகிச்சைகள் அனைத்தும் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் நிறுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளனர்.
மருத்துவர்களின் போராட்டம் நகரில் நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போது, ஒமிக்ரான் அச்சத்தால் பலரும் மருத்துவ பரிசோதனை செய்யும் நிலையில், இந்த போராட்டத்தில் அந்த வேலைகள் பாதிக்கப்படுக்கூடும்.
அதேபோல், அனைத்து மருத்துவ சேவைகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக , அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த போராட்டமானது நவம்பர் மாத இறுதியில் வெளிநோயாளிகள் பிரிவு சேவையை (OPD) திரும்ப பெறுவதாக இரண்டு தேசிய அமைப்புகள் - குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு (FORDA) மற்றும் அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) அறிவித்த நாளில் தொடங்கியது. இப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமான நிலையில், அவசர சேவைகளையும் மருத்துவர்கள் புறக்கணிக்கத தொடங்கியதால், அரசு வலியுறுத்தலால் போராட்டம் ஒருவாரக்காலம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் டிசம்பர் 17 ஆம் தேதி முதல் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட தொடங்கினர்.
குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில், " FAIMA மற்றும் அதனுடன் தொடர்புடைய RDA-கள் இது வரை மிகுந்த நிதானத்துடன் உள்ளோம். அவசர சேவைகளை இதுவரை நிறுத்தவில்லை என்பதை அதிகாரிகளுக்கு நினைவூட்டுகிறோம்.ஆனால், அரசும், அதிகாரிகளும் எங்களை கைவிட்டுள்ளனர். இழுத்து சென்று கைது செய்யப்பட்ட எங்களது சக மருத்துவர்களுடன் அனைத்து மருத்துவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.எனவே,நீங்கள் நடவடிக்கை எடுக்கும்வரை நாளை காலை 8 மணி முதல் அவசர சிகிச்சை உட்பட அனைத்து வேலைகளும் நிறுத்தப்படும்" என தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil