scorecardresearch

போலீஸ்காரர் உள்பட 7 பேர் பலி: டெல்லியில் கலவர மயமான சி.ஏ.ஏ. போராட்டம்

டெல்லி துணைநிலை ஆளுநர்  அனில் பைஜால் வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு டெல்லி போலீசாரைக்  கேட்டுக் கொண்டுள்ளார்.

delhi violence
delhi violence, CAA protest,டெல்லி வன்முறை, காவலர் பலி, கபில் மிஸ்ரா

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்திற்கு அருகே உள்ள சாலையில் கடந்த சனிக்கிழமை முதல் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், சீலம்பூர் மற்றும் மஜ்பூர், யமுனா விஹார் இடையிலான 66-வது சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஷாகீன் பாக் நடத்தப்படும் போராட்டங்களைப் போன்றே இங்கும் தேசிய கொடி,தேசிய கீதம், இந்திய அரசியலமைப்பு புத்தகம் போன்றவைகளோடு போராட்டம் தொடர்ந்தது.   இதனால், அங்கு போலிஸ் குவிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறாமல் போரட்டத்தை நிறுத்த  முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

 

ஞாயிற்றுக்கிழமை கபில் மிஸ்ரா பேச்சு:  

ஞாயிற்றுக்கிழமை, ஜாஃப்ராபாத் போராட்ட தளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் அருகில் இருக்கும்  மஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகே சிஏஏ ஆதரித்து மக்கள்  போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட   டெல்லி பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, இன்னும் மூன்று நாட்களில் ஜாஃப்ராபாத் போராட்ட தளத்தை காவல் துறை அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல், காவல் துறையின் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோம் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை கபில் மிஸ்ரா மஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ நிலையத்தை விட்டு கிளம்பிய சில மணித் துளிகளிலேயே வன்முறை வெடிக்க ஆரம்பித்தது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்பாளர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த பதட்டமான சூழல் இன்றும் தொடர்கிறது.

ஜாஃப்ராபாத் (சிஏஏ எதிர்பாளர்கள்) பகுதியில் இருக்கும் சில வீடுகளும், குடோன்களும் எரிக்கப்பட்டன.  மஜ்பூர்-பாபர்பூர் (சிஏஏ ஆதரவாளர்கள்) மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் உள்ள சில கார்களும் கொளுத்தப்பட்டன.

இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு போலீஸார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். பதட்டம் தணிந்த பாடில்லை. இதில், ஒரு சோக நிகழ்வாக டெல்லி காவலர் ஒருவர் கல்வீச்சில் பலியாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான காவலர்

 

இந்நிலையில் மவுஜ்பூர் பகுதியில் நேற்று 2-வது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது பா.ஜனதா தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் சிலர் அங்கு கூடினார்கள். அவர், போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.

அந்த சமயத்தில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசினர். இருதரப்பினரையும் போலீசார் அமைதிப்படுத்த முயன்றும் முடியவில்லை. ஜப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் இருந்த பல வாகனங்கள், வீடுகள், கடைகள் ஆகியவற்றுக்கு சிலர் தீவைத்தனர். கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே டெல்லி கவர்னர் அனில் பைஜால், வடகிழக்கு டெல்லியில் அமைதியை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் டெல்லி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்

டெல்லி துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்: டெல்லி துணைநிலை ஆளுநர்  அனில் பைஜால் வடகிழக்கு டெல்லியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு டெல்லி போலீசாரைக்  கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, பதட்டமான இடங்கள் 144 தடை உத்தரவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கபில் மிஸ்ரா பேச்சே காரணம்:  அசாதுதீன் ஒவைசி

எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டரில், ” வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய டெல்லி பாஜக கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், அவரின் பேச்சின் தன்மை தான் மோதல்களுக்கு வழிவகுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

 

அமைதியாக இருங்கள்: கபில் மிஸ்ரா

வன்முறை எந்தவொரு தீர்வையும் தராது, எந்தவொரு சர்ச்சைக்கும் வன்முறை ஒரு தீர்வாகாது. டெல்லியின் சகோதரத்துவத்தை வைத்திருப்பது அனைவருக்கும் நல்லது. சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்பாளர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன் என்று கபில் மிஸ்ரா சற்று முன்பு ட்வீட் செய்துள்ளார்.

டெல்லி மெட்ரோ அறிவிப்பு:  டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி) ஜாஃப்ராபாத், மஜ்பூர்-பாபர்பூர், கோகுல்பூரி, ஜோஹ்ரி என்க்ளேவ், சிவ் விஹார் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடியது. இந்த நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படாது என்று அறிவித்துள்ளது.

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Delhi caa violence maujpur babarpur jaffrabad constable killed