இந்தியாவில் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் மோடி அண்மையில் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று(ஆகஸ்ட் 16) மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த அமைச்சர்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தங்களுடன் எந்த அரசியலும் இல்லாமல் பணியாற்றுகிறார் என்றும் சுகாதாரத்துறைக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் தங்களின் சவால்களை நேரடியாக அவரிடம் தெரிவிக்க உதவியாக இருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
கிரண் ரிஜிஜு பேச்சு
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற வளாகத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், "பலர் எனக்கு சட்டம் தெரியாது என கூறலாம். எனக்கு சட்டத்துறையில் அனுபவம் இல்லை, சட்டங்களைப் பற்றிய புரிதல் இல்லை என்று கூறலாம். ஆனால் நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறேன் என்பதில் உறுதியான பங்கு இருப்பதாக உணர்கிறேன். சில நேரங்களில் நாடாளுமன்றத்திலும் இந்த பங்கு தொடர்கிறது. தொடர்ந்து இதில் பயணிப்பேன்" என்றார்.
அடுத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி ரமணா, "சட்ட அறிவை விட, அனுபவம், பொது அறிவு , அர்ப்பணிப்பு ஆகியவை மிக முக்கியம் அது உங்களிடம் உள்ளது என்று கூறினார். மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் நீங்கள் உதவுவீர்கள்" என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil