Advertisment

கெஜ்ரிவால் வழக்கில் சிக்கிய தந்தை - மகன்: பா.ஜ.க கூட்டணிக்காக ஆந்திராவில் பிரச்சாரம்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கிய பிரமுகர்களான மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி மற்றும் அவரது மகன் ராகவா மகுண்டா ரெட்டி பா.ஜ.க கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Delhi excise policy case CM Arvind Kejriwal arrest mangunta s  campaigning for BJP ally TDP andhra pradesh Tamil News

70 வயதான மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி முன்னாள் காங்கிரஸ்காரர் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோல் தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Delhi | Arvind Kejriwal | டெல்லி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றசாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட இதுவரை 12 பேரை அமலாக்கத்துறை கைது செய்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: As Kejriwal names Maguntas in court, father and son campaign for BJP ally in Andhra

கெஜ்ரிவால் கைது 

இந்நிலையில், 'சவுத் குரூப்' என்கிற குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில், அக்கட்சியைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் சுமார் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாகவும், அந்தக் குழுவில் அரவிந்தோ பார்மா நிறுவனர் சரத் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்.எல்.சி.யுமான கவிதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் மது வியாபார சந்தையின் பெரும் பங்கு அந்தக் குழுவுக்குக் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இந்த வழக்கில் கவிதா கடந்த 15 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. இதே வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21- ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கும் ஜாமீன் கிடைக்காத நிலையில், நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். 

ஒப்புதல்

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கிய பிரமுகர்களான மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி மற்றும் அவரது மகன் ராகவா மகுண்டா ரெட்டி பா.ஜ.க கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக உள்ளனர். 

மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி மற்றும் அவரது மகன் ராகவா மகுண்டா ரெட்டி ஆகிய இருவரும் 'சவுத் குரூப்' குழுவில் முக்கியப் புள்ளிகள். அவர்கள் பாலாஜி டிஸ்டில்லரீஸ் எனும் மது ஆலையை நடத்தி வருகிறார்கள். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருவரும் சிக்கிய நிலையில், கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அமலாக்கத்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 2022 செப்டம்பரில் ஸ்ரீநிவாசுலுவுக்குச் சொந்தமான நெல்லூர், புதுடெல்லி மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது தான் இந்த வழக்கில் அவரது பெயர் முதன்முதலில் அடிப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்படவில்லை.

பிப்ரவரி 2023 இல், பணமோசடி வழக்கில் பேரில் ஸ்ரீநிவாசுலு மகன் ராகவா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தனது மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீனிவாசுலு தனது வாக்குமூலத்தை மாற்றியதாகவும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் வளைந்து கொடுத்ததாகவும் நேற்று வியாழக்கிழமை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  குற்றம் சாட்டியிருந்தார். 

அக்டோபர் 2023 இல், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால், இந்த வழக்கில் ராகவாவை ஒப்புதல் அளிப்பவராக மாற்ற அனுமதித்த நிலையில், ராகவாவின் 7 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் 6 அவருக்கு எதிராக இல்லை என்றும், ஒரு வாக்குமூலம் மட்டுமே தனக்கு எதிராக இருந்தது. அவர் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவுடன், அவர் விடுவிக்கப்பட்டார் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  குற்றம் சாட்டி இருந்தார். 

ராகவா ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத்துறை வழக்கில் மன்னிப்பும், இந்த ஆண்டு பிப்ரவரியில் சி.பி.ஐ வழக்கில் முன்ஜாமீனும் பெற்றார்.

பின்னணி - பிரச்சாரம் 

70 வயதான மகுண்டா ஸ்ரீநிவாசுலு ரெட்டி முன்னாள் காங்கிரஸ்காரர் ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஓங்கோல் தொகுதியில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். 3 முறை காங்கிரஸ் எம்.பி.யாகவும், தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருகிறார். அவர் ஆந்திராவை பிரிக்கும் முன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த நிலையில், 2014 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார். 

இதன்பிறகு, 2019 இல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஓங்கோலிலிருந்து எம்.பி-யாக வெற்றி பெற்றார். டெல்லி மதுபான கொள்கை வழக்கு பூதாகரமாக வெடித்த நிலையில், அந்த வழக்கில்ராகவா கைது செய்யப்பட்ட பிறகு கட்சி தந்தை மகன் இருவருக்கும் ஆதரவு கொடுக்காவில்லை. அதனால், இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளனர். ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் வட்டாரங்களின்படி, தேசிய கவனத்தை ஈர்த்த வழக்கில் சிக்கிய ஒருவரை மீண்டும் தேர்தலில் களமிறக்க முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அஞ்சியதாகவும் கூறப்பட்டது.  

இதனையடுத்து, தந்தை மகன் இருவரும் இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று தெலுங்கு தேசம் கட்சியில் (டி.டி.பி) இணைந்தனர். அவர்கள் இருவரையும் அக்கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். ஸ்ரீநிவாசுலு ரெட்டி தற்போது மீண்டும் ஓங்கோல் தொகுதியில் இருந்து எதிர்வரும் நாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டி.டி.பி வட்டாரங்களின்படி, ஸ்ரீனிவாசுலு ஆரம்பத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டதாகவும், மகன் ராகவா ஓங்கோல் தொகுதியில் போட்டியிட முயற்சி மேற்கொண்டதாகவும், அவர் தனது கோட்டையாக இருந்த அதே மக்களவைத் தொகுதியிலிருந்து சீட் பெறுவார் என்றும் நம்பியுள்ளார். ஆனால், அவரது மகன் மீதான வழக்கு இன்னும் நீடிப்பதால், ஸ்ரீனிவாசுலுவுக்கு சீட் கொடுப்பதில் தெலுங்கு தேசம் அதிக ஆர்வமாக இருப்பதாக அறியப்படுகிறது.

தெலுங்கு தேசம் கட்சியைப் பொறுத்தவரை, ஓங்கோலில் ஸ்ரீநிவாசுலு ரெட்டி குடும்பத்தின் செல்வாக்கு தொகுதியில் முக்கியமான இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதன் அரசியல் எழுச்சியைத் தவிர, மகுண்டா குடும்பம் பாலாஜி டிஸ்டில்லரீஸ் மற்றும் இரண்டு நிறுவனங்களை வைத்திருக்கிறது. மேலும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபான வியாபாரத்தில் அவர்களின் குடும்பம் உள்ளது.

தந்தை-மகன் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தவுடன், குடும்ப கோட்டையிலிருந்து சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ராகவா மார்ச் முதல் வாரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஓங்கோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓங்கோல், தர்சி, கிடலூர், கனிகிரி, கொண்டாபி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று நடைபயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

ராகவா யர்ரகொண்டபாலம் மற்றும் மார்கபுரம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டவுடன், ஸ்ரீனிவாசுலு போட்டியிடுவது நல்லது என்று தெலுங்கு தேசம் கட்சி தலைமை தெரிவித்துள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment