Lakshmi Elephant: டெல்லியில் வனவிலங்குகளை வளர்ப்பதற்கு ஏற்ற நகரம் அல்ல என்பதால் டெல்லியில் வளர்க்கப்படும் யானைகளை பறிமுதல் செய்து, அவற்றை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்புமாறு கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவிட்டது டெல்லி ஐகோர்ட்.
இதன் பொருட்டு டெல்லியில் வளர்க்கப்பட்டு வரும் யானைகளை பறிமுதல் செய்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்படி ஒரு யானையை பறிமுதல் செய்யப் போகையில், லட்சுமியை பராமரித்து வந்தவர்களுக்கும் வன விலங்கு அதிகாரிகளுக்கும் இடையே சண்டை மூண்டது. இதனைத் தொடர்ந்து அளவுக் கடந்த பாசத்தால் தனது யானையுடன் எஸ்கேப் ஆனார், யானையின் பாகன் யூசுப் அலி.
காணாமல் போன அந்த யானையை இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி காவல்துறை மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் வலை போட்டு தேடி வந்தனர். இது குறித்து கடந்த ஜூலை மாதம் நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில், யானையின் உரிமையாளர் யூசுப் அலி- ஐ இந்தியன் எக்ஸ்பிரஸிலிருந்து தொடர்புக் கொண்டோம்.
”ஜூலை 6 ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு நாங்கள் தலைமறைவாகி விட்டோம். நான் சில நாட்கள் யமுனாவின் கரையோரம் உள்ள காடுகளில் லட்சுமியை மறைத்து வைத்திருந்தேன். அதே நேரத்தில் வீடுகளை நான் மாற்றிக்கொண்டே இருந்தேன், எனது உறவினர்களுடன் இங்கு சில நாட்கள் தங்கியிருந்தேன்” என்ற அலி,
”சில நாட்களுக்குப் பிறகு, என் நண்பர் தன்னிடம் ஒரு பெரிய பண்ணை வீடு இருப்பதாகக் கூறினார். அங்கு தான் நான் லட்சுமியை வைத்திருந்தேன். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நடைப்பயணத்திற்கு வெளியே கூட்டிச் செல்வேன்” என்றார்.
கடந்த இரண்டு வாரங்களாக போலீசாரிடமிருந்து மறைந்துக் கொண்டு தனது தொலைபேசி எண்களை மாற்றிக்கொண்டிருந்ததாகக் கூறிய அலி, லட்சுமிக்கு உணவு வாங்குவதற்கும், தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் அவ்வப்போது வெளியே வருவேன் என்றார். "அது மிகவும் கடினமான நேரம். நான் லட்சுமியை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. வீட்டில் உணவு இல்லையென்றால் பிரச்னையில்லை, ஆனால் தினமும் 500 லிட்டர் தண்ணீர் டேங்குடன், கரும்பு மற்றும் ஜோவரை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார் அலி.
இந்நிலையில் யூசுப் அலி, தற்போது ஐபிசி பிரிவு 353 (அரசு ஊழியரை தனது கடமையை செய்ய விடாமல் தாக்குதல் ) மற்றும் 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடுகளை தடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உள்ளதாக, அலியின் வழக்கறிஞர் ஷைலேந்திர பப்பர் கூறினார்.
மேலும் தொடர்ந்த அலி, ”இது என்னுடைய யானை, அதனுடன் எனக்கு உணர்வு பூர்வமான தொடர்பு இருக்கிறது. வழக்கின் தீர்ப்பு (ஆளும்) வனவிலங்கு துறைக்கு சாதகமானால், நான் என் யானையைத் திருப்பித் தர வேண்டும். அதுவரை, இது என்னுடையதாக இருக்கட்டும். ஒருவேளை நீதிமன்றம் எனது பாதுகாப்பைக் கேட்டு அதைப் புரிந்து கொள்ளும். யானையை கைப்பற்ற வன அதிகாரிகள் வந்தபோது எனது மனைவியும் மகனும் யானைக்கு காலை உணவளிக்கச் சென்றிருந்தனர். நீதிமன்ற உத்தரவு தொடர்பான அறிவிப்பைக் காட்டும்படி என் மனைவி கேட்டதற்கு, அவர்களிடம் எதுவும் இல்லை என்றவாறு, அவரை தள்ளி விட்டிருக்கின்றனர்” என்கிறார் சோகத்துடன்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க This is the elephant police and wildlife officials are looking for