மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை குற்றசாட்டுகளை ஒப்புக்கொள்ள சொல்லி மனரீதியான சித்திரவதை செய்து துன்புறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வரும் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிலால் முதல்வராக இருந்து வருகிறார். இதில் துணை முதல்வராக மட்டுமல்லாமல் பலதுறைகளின் மேற்பார்வையாளராக செயல்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மீது மதுபான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே கடந்த பிப்ரவரி 28-ந் தேதி சிபிஐ மணீஷ் சிசோடியாவை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பல மணிநேரம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இது மனரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும் எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், சிசோடியா ஊழல் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க எந்த ஆவண ஆதாரமும் சிபிஐயிடம் இல்லை. ஆதாரம் இல்லாததால், சித்திரவதை மூலம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வைப்பதும், ஒருவழியாக தவறான வாக்குமூலத்தில் கையெழுத்திடுவதும்தான் அவர்களின் மொத்த நோக்கமாக இருக்கிறது என கூறியுள்ளார்.
அதேபோல் கல்காஜி எம்எல்ஏ அதிஷியும் சிபிஐ அதிகாரிகள் “பாஜகவில் உள்ள தங்கள் அரசியல் முதலாளிகளை மகிழ்விப்பதற்காக சிசோடியாவை சித்திரவதை செய்வதாக” குற்றம் சாட்டினார். காவலில் வைக்கப்படும் சித்திரவதைகள், அழுத்தங்களை உருவாக்குதல் மற்றும் பொய்யான வாக்குமூலங்களில் கையெழுத்திடுதல் போன்றவற்றைப் பற்றிய திரைப்படங்களை நாங்கள் பார்த்தோம், ஆனால் அது இப்போது நிஜமாகவே நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர், “சிசோடியா கைது ஆம் ஆத்மியை உலுக்கியுள்ளது. அதனால்தான் சிசோடியாவின் கைது தொடர்பாக மூன்று-நான்கு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் செய்தியாளர் சந்திப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறார்கள் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“