Delhi Riots WhatsApp groups created to spread hate
ஐந்து நாட்களுக்கு முன்னர் வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 42-ஐ எட்டியது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை அதிகாலை சிவ் விஹாரில் 60 வயது நபர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார்.
அங்கு நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து இதுவரை 123 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 630 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 47 அமைதி குழு கூட்டங்கள் நடைபெற்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். "வடகிழக்கு டெல்லியின் நிலைமையை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்" என்று கூடுதல் சிபி எம் எஸ் ராந்தவா செய்தியாளர்களிடம் கூறினார்.
ஷிவ் விஹாரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் காசியாபாத், லோனியைச் சேர்ந்த அயூப் அன்சாரி என்பவர் இறந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் கூறினர். தற்செயலாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு சென்றிருந்தார். நிலைமை குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தார்.
Advertisment
Advertisements
வன்முறையால் பாதிக்கப்பட்ட 36 சடலங்களை போலீசார் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர். அயூப்பைத் தவிர, வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட மற்றவர்கள் முபாரக் ஹுசென் (28), தில்பர் நேகி (20), மோனிஸ் (21), பாபு சல்மானி (33) மற்றும் பைசன் (24).
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அயூபின் 18 வயது மகன், சல்மான் அன்சாரி, “பலத்த காயமடைந்த தனது தந்தையை உள்ளூர் கிளினிக்கிற்கு அழைத்துச் சென்று, காலை 6 மணியளவில் முதலுதவி செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார்” என்றார்.
மேலும் தொடர்ந்த சல்மான், “எனது தந்தை கடந்த சில நாட்களாக வன்முறை காரணமாக வீட்டில் இருந்தார். இன்று, அவர் ஸ்கிராப் சேகரிக்க அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டார். தெரியாத நபர்கள் சிலர் அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தபோது நான் எழுந்தேன். அவரது தலை, உடல் மற்றும் கால்களில் காயங்கள் இருந்தன. அந்த நேரத்தில் அவர் நினைவுடன் தான் இருந்தார், சிவ் விஹாரில் சில ஆண்கள் அவரைத் தடுத்து நிறுத்தியதாகவும், அவருடைய பெயரைக் கேட்டதாகவும் என்னிடம் கூறினார். அவர் பதிலளித்தவுடன், அவர்கள் அவரை அடித்துள்ளனர்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"