வடகிழக்கு டெல்லி வன்முறையில், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் 2 பேர் கலவரக்காரர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். மேலும், செய்தியாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளார். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
வடகிழக்கு டெல்லி வன்முறையில், ஜே.கே. 24X7 செய்தி தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், என்.டி.டி.வி.யின் இரண்டு செய்தியாளர்கள் வடகிழக்கு டெல்லியில் கலகக்காரர்களால் தாக்கப்பட்டு குத்தப்பட்டனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
வடகிழக்கு டெல்லி பகுதியில் சிஏஏ போராட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையில், டெல்லி மவுஜ்பூர் வட்டாரத்தில் வகுப்புவாத மோதல்களை படம்பிடிக்கும்போது ஆகாஷ் துப்பாக்கி தோட்டாவால் காயம் அடைந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆகாஷின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஜே.கே 24X7 சேனல் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
என்.டி.டி.வி பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் வடகிழக்கு டெல்லியில் ஒரு இடத்தில் இருந்தபோது கலவரக்காரர்களால் தாக்கப்பட்டதில் ஒரு பல்லை இழந்ததாக தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது சக செய்திஅயளர் சௌரப்பை கலவரக்காரர்கள் குத்தியுள்ளனர்.
டெல்லியில் இன்னும் பல ஊடகவியலாளர்கள் அவர்கள் எவ்வாறு துன்பப்பட்டார்கள் என்ற விவரத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டனர். மேலும் சிலர், தங்கள் மத அடையாளத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறினர்.
நேற்றுகூட செய்தியாளர்கள் வன்முறை பற்றி களத்தில் செய்தி சேகரிப்பது கடினமாக இருந்தது. அப்போது, அவர்களில் பலர் அச்சுறுத்தப்பட்டனர்.
இதனிடையே, வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என ஜிடிபி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.