Anand Mohan J
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவின் வாகனத் தொடரணியில் (கான்வாயில்) இருந்த வாகனங்களில் மாசுபட்ட டீசல் நிரப்பப்பட்டதால் பத்தொன்பது வாகனங்கள் வியாழக்கிழமை இரவு பழுதடைந்து நின்றன.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு பெட்ரோல் பம்பில் வாகனத் தொடரணி நிறுத்தப்பட்டபோது, அங்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருளில் தண்ணீர் கலந்திருப்பதாகக் கூறப்படுவதை அறியாத நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பின்னர் பெட்ரோல் பம்ப் சீல் வைக்கப்பட்டது.
சில வாகனங்கள் எரிபொருள் நிலையத்தை விட்டு வெளியேற முடிந்தது, ஆனால் சிறிது நேரத்திலேயே நெடுஞ்சாலையில் நின்றுவிட்டன, மற்றவை பெட்ரோல் பம்பிலிருந்து நகரக்கூட முடியவில்லை.
ரத்லமில் நடைபெறும் பிராந்திய தொழில் திறன் மற்றும் மேம்பாட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மோகன் யாதவ் சென்ற நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை 19 வாகனங்கள் மோகன் யாதவின் கான்வாயில் இடம்பெறவிருந்தன.
வெள்ளிக்கிழமை முதலமைச்சரின் நிகழ்ச்சிக்காக இந்தூரிலிருந்து வாகனங்கள் சென்று கொண்டிருந்ததாக வாகனத் தொடரணியின் ஓட்டுநர் சுபம் பர்மர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். "நாங்கள் இந்தூரிலிருந்து வந்து ஒரு பெட்ரோல் பம்பில் இறங்கி எரிபொருள் நிரப்பினோம். பெட்ரோல் பம்பை விட்டு வெளியேறிய முதல் சில வாகனங்கள் நெடுஞ்சாலையில் நின்றன, ஆனால் மற்றவை பெட்ரோல் பம்பிலேயே நின்றன."
எரிபொருள் சோதனை செய்தபோது, அதில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டறிந்ததாகவும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஓட்டுநர் கூறினார்.
விசாரணை நடந்து வருவதாக உள்ளூர் தாசில்தார் ஆஷிஷ் உபாத்யாய் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக டீசல் தொட்டிகளில் மழைநீர் புகுந்து இருக்கலாம், இதனால் மாசு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பெட்ரோல் பம்ப் அதிகாரிகளிடம் தாசில்தார் உபாத்யாய் கேள்வி எழுப்பினார். அதிகாரிகள் பெட்ரோல் பம்பை சீல் வைத்து, நிறுவனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.